ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும் பரலோகத்திற்கு தன்னை அழைத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைதான் என்று அவளுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.
அறிமுகமில்லாத சிரித்த முகங்களுக்கு முன்னால் அவள் அமைதியற்ற நிலையில் இருந்தாள்.
பாஸ்போர்ட்டும் எமிகிரேஷன் பேப்பரும் இடையே அவ்வப்போது அவளுடைய கைகளிலிருந்து பிடியை விட்டு தரையில் விழுந்துகொண்டிருந்தன.
மன்னிப்பு கேட்பவர்களின் முக வெளிப்பாட்டுடன் அவள் விமான நிலையத்தில் தளர்ந்த கால் வைப்புகளுடன் கனவில் நடப்பதைப்போல நடந்து கொண்டிருந்தாள்.
தன்னை வழியனுப்புவதற்காக வந்திருந்த நண்பனின் முகம் கண்ணாடி சுவரில் வெறுமொரு தங்கத் திலகமாக மாறிய பிறகும், அவள் திரும்பத்திரும்ப விடை கூறலுக்குப் பதிலாக கையை வீசினாள்.
பதைபதைப்பு காரணமாக தன் நடைக்கு அழகில்லாத நிலை உண்டாகியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
தன்னம்பிக்கை உணர்விற்குச் சேதம் உண்டாகியிருக்கிறது என்பதை தன்னை வழிபடுவதாகக் கூறிய அந்த மனிதன் புரிந்துகொண்டிருப்பானா?
அவனுடைய முகத்தை மீண்டுமொரு முறை பார்ப்பதற்காக அவள் நடையை நிறுத்திவிட்டு, பின்னோக்கித் திரும்பினாள்.
இல்லை...
அவனுடைய முகம், முகங்களுடன் கரைந்து சேர்ந்துவிட்டிருந்தது.பல முகங்கள் ஒன்றாகிப் படைத்த ஒரு சமுத்திரம்...
விடைபெறும் வார்த்தைகள் ஒன்று சேர்ந்து எழுந்த அலைகளின் ஆர்ப்பரிப்பு....
அவள் விமான நிலையத்தின் விற்பனை மையங்களை நோக்கி நடந்தாள். நூறு டாலருக்கான ஒரு நோட்டு, தோல் பையில் எஞ்சியிருந்தது. அந்த தொகையை அவள் செலவழிக்க விரும்பினாள். பாட்டித் சட்டைகள் ஒவ்வொன்றையும் அவள், விரலின் நுனிகளால் தொட்டு சோதித்துப் பார்த்தாள்.
"இதற்கு முப்பது டாலர் போதும். உங்களு டைய கணவருக்கு இந்த சட்டை மிகவும் பிடிக்கும்.
அவருடைய அளவு எவ்வளவு? நாற்பதா?'' கடைக்காரன் கேட்டான்.
தன் கணவர் இறந்துவிட்டார் என்பதைக் கூறுவதற்கு அவள் தயாராக இல்லை.
"இல்லை... அவருடைய அளவு நாற்பத்து நான்கு.
உயரமும் பருமனும் பொருத்தமாக இருக்கும் மனிதர்தான் என் கணவர்.'' அவள் கூறினாள்.
"அப்படின்னா... இந்த நேவி ப்ளூ சட்டையை எடுங்க... ஃபலிப்பீ நோக்காரின் ரசனையை மனதில் வைத்து தைக்கப்பட்ட ஒரு சட்டை இது. இதன் காலரில் வைக்கப்பட்டிருக்கும் லேஸைப் பார்த்தீங்கள்ல? இந்த சட்டையில் இருக்கக்கூடிய லேஸ் உலகத்திலேயே மிகவும் சிறப்புத் தன்மை கொண்ட லேஸ். இது உங்களுடைய பிரியத்திற் குரிய கணவருக்குச் சேராமல் இருக்காது. அவரு டைய நிறம் வெண்மையா?''
"அவர் பார்ப்பதற்கு ஒரு இத்தாலிக்காரரைப் போல இருப்பார்.வெளுத்து சிவந்த நிறம்... முடி சுருண்டிருக்கும். அவருக்கு ஆறு ஆடி இரண்டு அங்குலம் உயரம்...'' அவள் கூறினாள்.
"நீங்கள் அதிர்ஷ்டசாலி. அழகான ஒரு கணவர் கிடைப்பதென்பது அதிர்ஷ்டமான ஒரு விஷயம்தான். என் மனைவி தினந்தோறும் இரண்டு தடவைகளாவது தன் தலைவிதியைக் கூறி சபிப்பாள். தனக்கு உயரம் குறைவான... தலையில் வழுக்கை விழுந்த ஒரு கணவர் கிடைத்ததற்காக அவள் ஆழமாக கவலைப்படுகிறாள்.'' கடைக்காரன் பலமாக சிரித்தவாறு கூறினான்.
"உங்களுக்கு எந்தவொரு அழகுக் குறைபாடும் இல்லை.'' அவள் மென்மையான குரலில் கூறினாள்.
"தேங்க் யூ... தேங்க் யூ'' அவன் முணுமுணுத்தான்.
"கணவரைப் பிரிந்து நீங்கள் எதற்கு இந்த நாட்டிற்குப் பயணம் செய்தீங்க?''
"நான் ஒரு எழுத்தாளர். எழுத்தாளர்களின் மாநாட்டிற்காக வந்தேன். ஏழு நாட்கள் தங்குதல் மட்டும்... அவர் எழுத்தாளர் அல்ல. ஒரு தொழிலதிபர்.''
"என்ன தொழில்?''
"மோட்டார் காரின் சில உறுப்புகளைத் தயார் பண்ணும் ஒரு தொழிற்சாலை அவருக்கு இருக்கிறது.''
கட்டுக்கதைகளை உண்டாக்கும்போது அனுபவிக்கக் கூடிய அந்த தனித்தன்மை கொண்ட சுகம் அவளுடைய கன்னங்களைச் சிவப்பாக்கியது.
அவளுடைய கண்கள் ஒளிர்ந்தன.
தனக்கு தொழிலதிபரான ஒரு கணவர் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்பதையும், தான் வெறுமொரு விதவைதான் என்பதையும் அந்த விற்பனை செய்யும் மனிதனிடம் கூறவேண்டிய அவசியமில்லையே! அவள் தனக்குள் கூறிக்கொண்டாள்.
"அழகான ஒரு வாழ்க்கைப் பங்காளி கிடைத்தால், மனித வாழ்க்கை சொர்க்கம்தான்.'' விற்பனைக்காரன் பெண்கள் அணியக்கூடிய ஒரு சில்க் ஆடையைத் தன் சரீரத்துடன் சேர்த்து வைத்தவாறு கூறினான்.
அவனுடைய பார்வை ஆபாசமானது என்று அந்த நிமிடத்தில் அவளுக்குத் தோன்றியது.
அறிமுகமற்ற நபர்களிடம் நட்புணர்வுடன் பேசக்கூடாது என்று மரணமடைந்துவிட்ட கணவர் கூறுவதுண்டு.
"ஆபத்தை நீயே வரவழைத்துக் கொள்ளக் கூடாது'' அவர் கூறுவார்: "அவமானத்திற்கு ஆளாவது நீதான். நானல்ல. நீ மோசமான பெண் என்று வெறுமனே தவறாக நினைக்க வைக்காதே.''
தவறாக நினைக்க வைப்பதும் நடிப்பதும் கதைகள் படைப்பதும் மட்டுமே நிரந்தரமான பணிகள் என்று நடந்துகொண்டிருந்தன.
ஒவ்வொரு இரவிலும் ஒப்பனைகளைக் கழற்றி வைத்துவிட்டு, தான்.... தான் மட்டுமே என்று எஞ்சியிருக்கும்போது அவள் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளக்கூடிய ஒரே கேள்வி "நான் யார்?' என்பதுதான்.
கையிலிருந்த நூறு டாலர்களையும் வினோதமான அந்த வெளிநாட்டு ஆடைக்கு செலவழித்துவிட்டு, அந்த கடையைவிட்டு வெளியே வந்தபோது, பதில் கிடைக்காத அந்த கேள்வி அவளை மீண்டும் அலைக்கழித்தது.
மரணமடைந்து விட்ட தன் கணவரும் தனிமையில் இருக்கும்போது அந்த கேள்வியைக் கேட்டிருப்பாரோ? மரணத்திற்கு அடிபணியும் அந்த இறுதி நிமிடத்தில் அவர் அதற்கான பதிலைத் தெரிந்துகொண்டிருப்பாரா? கண்கள் திடீரென திறந்தன.
சூனியமான காட்சிகளுக்கு முன்னால் அவள் கற்சிலையைப் போல நின்றுகொண்டி ருந்தாள்.
விடைபெறல் வார்த்தைகளை மறந்து... காதலை மறந்து... வேதனையை மறந்து...
வாசனைப் பொருட்களும் செங்கற்களைப்போல பெரிதாக இருந்த சாக்கலெட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண்கள் புன்னகைத்தார்கள்.
"இல்லை... நாங்கள் டாலர்களை மட்டுமே வாங்குவோம்.'' அவர்களில் ஒருத்தி கூறினாள்.
தன் கையிலிருந்த இரண்டாயிரம் இலங்கை பணத்தை அவள் புத்த மத மையத்தின் நன்கொடைப் பெட்டிக்குள் போட்டாள்.
விமானத்தில் ஏறியபோது, முன்வரிசை இருக்கையில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த வயதான மனிதரைப் பார்த்து அவள் புன்னகைத் தாள்.
"உங்களுக்கு என்னைத் தெரியுமா? சரியான ஞாபக சக்தி எனக்கு இல்லாத காரணத்தால், பல நண்பர்களைப் பார்க்கும்போது, அடையாளம் தெரியாமல் போகிறது.'' சாம்பல் நிறத்தில் ஒரு சூட் அணிந்திருந்த அந்த மனிதர் கூறினார்.
"நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருளின் நறுமணம் எனக்கு பிடித்திருப்பதைப்போல தோன்றியது. நான் உங்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை.'' அவள் கூறினாள்.
"கடந்த வாரம் கொழும்புவில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் பங்கெடுப்பதற்காக வந்திருந்த ஒரு இந்திய எழுத்தாளரா நீங்கள்? உங்களுடைய புகைப்படத்தை செய்தித்தாளில் பார்த்ததாக நினைவில் இருக்கிறது.'' அவர் கூறினார்.
"நான் எழுத்தாளர் அல்ல. அந்த புகைப்படம் வெறொரு பெண்ணுடையதாக இருக்க வேண்டும். நான் ஒரு பிஸினஸ்காரி.''
"என்ன பிஸினஸ்?''
"அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவ மனையில் பயன்படுத்தப்படும் கருவிகளை நான் என் தொழிற்சாலையில் தயாரிக்கிறேன்.''
வசீகரமான ஒரு புன்சிரிப்புடன் அவள் கூறினாள். கிழவர் அவளுடைய கையைப் பற்றினார்.
"உங்களைச் சந்தித்ததற்காக நான் சந்தோஷம் அடைகிறேன்.'' அவர் கூறினார்.