ஒரு மொழியை மொழியாக மட்டுமே பார்த்துவிட முடியாது. ஆறு ஓடுகையில் ஆற்றுப் படுகை உருவாவது போல், அழகிய கூழாங்கற்கள் உருவாவது போல், நிலத்தோற்ற மாறுபாடுகள் உருவாவது போல், ஒரு மொழியானது மக்களிடம் கலாச்சாரப் பண்பாட்டு மாற்றங்களையும் இலக்கியம் சார்ந்த மனநிலையையும் வெகு சாதாரணமாக ஏற்படுத்தி விடுகிறது.
மொழியின் அடர்த்தி கருதிதான்...
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு’
என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.
எத்தனையோ வளர்ச்சி அடைந்த மொழிகளெல்லாம் கூட இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன அது ஏற்படுத்திய கலாச்சாரப் பண்பாட்டுப் பாதிப்புகளால். எடுத்துக்காட்டாக சமஸ்கிருதத்தைச் சொல்லலாம். பேசப்படாத மொழியாக இருப்பினும் பாடல்களாக மந்திரங்களாக வேதங்களாக இன்றளவும் அவற்றை இழுத்துப் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே அதை உயிர்ப்பித்து நம் தலையில் கட்டும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.
உலகின் பழமையான மொழிகளெல்லாம் கி.மு 2500 க்கும் உட்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவையே. நம் தமிழ் மொழியைத் தவிர...! தமிழ் மொழிக்கான காலச்செறிவு ஏறத்தாழ கி.மு. 50,000 என்று தொன்மையறியும் சரித்திர ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. அத்தகைய பழமையான ஒரு வாழும் மொழியைத் தாய்மொழியாகப் பெற்ற எந்தவொரு தமிழரும் இந்த உலகில் கொடுத்து வைத்தவர்தாம்.
உலகின் தலைசிறந்த பழமையான ஒரு மொழியைக் காப்பாற்றவும் அதன் சீரிளமையைப் பாதுக்காக்கவும் தவறிவிட்ட நன்றி கெட்டவர்களாகவே நம்மிலும் சிலர் இருப்பதை வெளிப்படையாகவே காணமுடிகிறது.
இந்தி ஏன் கூடாது? ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு?! என்று அங்கலாய்ப்பவர்கள் அதிகம். உண்மைதான் இந்தியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை அதைப் பள்ளியில் திணிப்பதைத்தான் வெறுக்கிறது தமிழகம்.
ஏற்கனவே ஆங்கில மோகம் தமிழைப் பாதாளத்தில் தள்ளிவிட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாய். பல நாடுகள் தமது பழமையான மொழிகளைக் காக்கவும் பயன்பாட்டில் கொண்டு வரவும் நடவடிக்கைகளை எடுத்துவரும் இக்காலகட்டத்தில் தமிழை அழிக்கவும் சமஸ்கிருதத்தை முதலாவதாகக் கொண்டுவரவும் வரலாற்று ஆவணங்களை அழித்துவிடத் துடித்துக்கொண்டு இருக்கிறது வடக்கு.
அலெக்சாண்டரும் தைமூரும் தலைவைத்துப் படுக்காத நம் தேசத்தின் தெற்கு திசையை நசுக்கிவிடத் துடிக்கிறது ஒன்றியம். தமிழே உலகின் மையம் என்பதை அழிக்க. தமிழுக்கு எதிரான இதுபோன்ற பல சூழ்ச்சியாளர்களை வீழ்த்தித் தமது காலால் தாண்டி வந்த மொழி தமிழ்! கீழடியை நீங்கள் அழித்தாலும் மேலெழுந்து வரும் நமது மொழி! இராசரானின் கல்வெட்டுகளில் கட்டிடக் கற்களில் நீங்கள் சமஸ்கிருதம் பொறித்தாலும் அது தமிழுக்கு இழுக்கல்ல நீங்கள் உயர்த்த நினைக்கும் அம்மொழிக்கே இழுக்கு. ஒருமொழி தன்னை வேற்று மொழியின் வரலாற்று ஆவணங்களை அழிப்பதால் உயர்த்திக் கொள்ள முடியாது. தமது வளமான இலக்கண இலக்கியச் செழிப்பாலேயே அது சாத்தியம்...! வடக்கின் அரசியல் தெற்கில் உதிக்கத் தமிழ் தடையாய் இருக்கிறது என்பதால் தமிழ் முற்றிலும் டெல்லியால் புறக்கணிக்கப்படுகிறது இருட்டடிப்பு செய்யப்படுகிறது. தமிழை அவர்கள் புறக்கணிப்பதில் அவர்களுக்கு ஒரு சரியான காரணம் இருக்கிறது ஆனால் தமிழர்களே நீங்கள் புறக்கணிக்க என்ன காரணம் இருந்துவிட போகிறது...?!
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மொழி களெல்லாம் கூட அம்மொழி யின் மைந்தர்களால் பத்திரமாகப் பாதுக்காக்கப் படுகிறது. ஐம்பதாயிரம் ஆண்டு பழமையான நம் தமிழ் மொழி ஏனோ தமது மைந்தர்களாலேயே வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக் கிறது...! ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியை வேண்டுமானா லும் கற்றுக்கொள்ளுங்கள் கற்றுக்கொடுங்கள் உங்கள் தலைமுறைக்கு. ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் தன் குழந்தையை அதன் தாய்போல் எந்த சிற்றம் மையும் பெரும்பாலும் பாராட்டிச் சீராட்டுவதில்லை...! தாய் மொழியும் அவ்வாறே...! ஆங்கிலமும் அண்ணாந்து பார்க்கும் மொழி தமிழ்...! ஒரு நாள் வரும் உலகமே உயர்த்திப் பிடிக்கும் நம் தமிழை உலகமே தம் தோளில் சுமந்து உவகையுடன் கொண்டாடும் அப்போது வெறும் பார்வையாளர்களாகக் கைத்தட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கத்தான் போகிறது இந்த வடக்கும் அந்த மேற்கும்...!