சமூக நீதியை யார் நினைத்தாலும் அவரவர் தளத்தில் நிலைநாட்டமுடியும் என்பதை நிரூபித்து வருகிறது ஒரு தொலைக்காட்சி. அந்தத் தமிழ்த் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான 'சரிகமப’ இசைப் போட்டியின் நான்காம் கட்ட நிகழ்ச்சி, சிறப்பாக அரங்கேறி வருவதை பலரும் கண்டு மகிழ்ந்துவருகின்றனர்.
ஆனால் இதுவரை நடந்த சரிகமப இசை நிகழ்ச்சியிலிருந்து இந்நிகழ்ச்சி முற்றிலும் வேறு பட்டது.
அன்றாட தினக்கூலிகளாக இருந்து எவ்வித இசைப்பயிற்சியும் எடுக்காமல், ஒரு ஹெட் ஃபோன் துணையுடன் ஆட்டோவிலும், நடந்துபோகும் போதும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்டு ரசிக்கிற சாமான்யர்களும் இசையறிஞர்களைப் போலப் பாடி அசத்திவருகிறார்கள். இவர்கள் உலகம் முழுதும் பரவலாகக் கவனப்பட்டிருக்கிறார் கள். இது பெருமைக்குரியது.
இந்நிகழ்ச்சியைப் பார்த்து இவர்களின் வறுமை நிலையை அறிந்த வழக்கறிஞர் சுமதி , போட்டியாளர்களுக்குக் கொடையளித்து வள்ளலாரை நினைவுபடுத்திவிட்டார். இது மனதை ஈரமாக்கியது.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் திறமையாளர்கள் வசதியானவர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர். இது சமூக அடுக்குகள் ஒன்றுகலந்த ஒரு சமத்துவப் பூங்காவைப் போலப் பார்க்க அழகாக இருக்கிறது.
இந்தப் போட்டியாளர்கள் மிகச் சிறந்த முறையில் பாடி மக்களைப் பரவசப்படுத்துகிறார்கள். இவர்களுக் குள் இவ்வளவு திறமையா? என்று மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்கள்.
அண்மை நிகழ்வில் திறமை மிகுந்த விழுப்புரம் வீரபாண்டியன் என்கிற ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கைக் காட்சிகளைக் கண்ட பாடகி சைந்தவி, வீரபாண்டியனின் அம்மாவை இசைநடுவர்களுக் கென ஒதுக்கப்பட்ட தனக்கான இருக்கையில் அமரவைத்து தன் மகன் வீரபாண்டியன் பாடுவதைக் கேட்கச் செய்ததோடு, அவர் அருகிலமர்ந்து வீரபாண்டி அம்மாவை ஆற்றுப்படுத்திய அந்தக் காட்சி பார்வையாளர்களின் கண்களில் நெகிழ்வையே நீராகப் பெருகச் செய்தது.
அத்துடன் அவருக்கு இந் நிகழ்ச்சியின் மூலம் ஓரு புதிய ஆட்டோவை வழங்கி கௌரவித்தது, மீன்பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் மந்திரத்தை நினைவுபடுத்தியது. பார்வையாளர்கள் அனைவரும் வாழ்த்தினர்.
அதேபோல மற்றொரு போட்டி யாளரான பாலமுருகனின் வானம் தெரியும் கூரையில்லா வீட்டை மாற்றி, வீடுகட்டிக் கொடுத்து ஆற்றுப் படுத்தியதைப் பார்க்கும்போது ஜீ டிவி உண்மையில் கருணையும் இரக்கமும் கொண்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் கலைஞர்களைக் கைப்பிடித்து தூக்கிவிடும் பண்பால் கரவொலியைப் பெருமளவில் பெறுகிறது. இந்தப் பேரன்பு திக்கெட்டும் பேசப்படுகிறது.
தேவை அறிந்து உதவும் அன்பின் ஆழம் , சமூகத்திற்கு ஒரு விழிப் புணர்வை ஊட்டுகிறது.அன்பே அறம். அது சொல்லற்கரிது.
சக கலைஞர்களிடமும் ஒரு பாசப்பிணைப்பும் போட்டியை ஆரோக்யமாக எடுத்துக்கொண்டு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவும் அக்கறையும் பாலமுருகனுக்குக் காலணி வாங்கி அணியச்செய்து சூட்டைத் தணித்த நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சி.
சமூகத்தில் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவர் பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு , சில தெருக்களில் நடக்கவே கூடாது என்ற சட்டதிட்டங்கள் இன்னும் சில இடங்களில் நீடிக்கிறது. இப்படிப்பட்ட சாதி நோயாளி களின் ஆதிக்கம் பல உயிர் களைப் பலி வாங்கும் வன்மம் நீடிக்கின்ற சூழல் இப்போதும் நிலவுவதை பார்க்கிறோம்.
இவற்றுக்கு மத்தியில் இது போன்ற மனிதம் சார்ந்த ஆறுதல் வெளிச்சம் தென்படு வது மகிழ்வைத் தருகிறது.
ஏழ்மையாலோ சாதியால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டோ துயரோடு வாழ்பவர்களை ஓரங்கட்டி, அவர்களின் சொந்த உழைப்பில் அவர்கள் மேலே வந்தால்கூட அவர்களின் வீடுகளை இடித்து நொறுக்குவது, பொருட்களைச் சூறையாடிச் செல்வது என்கிற அளவிற்கு தொடரும் சாதி வன்முறை களுக்கிடையே, உழைப்பால்கூட மேல்வர இயலாது தடுப்பணை போடும் சமூகத்தில், வீரபாண்டியின் அம்மா, கழிவறை சுத்தம் செய்பவரின் கைப்பிடித்துச் சிம்மாசனத்தில் அமரவைத்து, அன்பு மகனின் பாடலைக் கேட்கச் செய்த பாடகி சைந்தவிக்கு வானத்து நட்சத்திரங்களையெல்லாம் கொண்டுவந்து மாலை கோர்த்து கழுத்தில் அணிவித்து வாழ்த்துச் சொல்லத் தோன்றுகிறது.
பஞ்சாயத்துத் தேர்தலில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரைக்கூட நாற்காலியில் உட்காரவிடாத சமூக விரோதிகளுக்கு மத்தியில் சமூகத்தில் நாற்காலிகளுக்குப் பின்னால் உள்ள பொதுப்புத்தி அரசியலை உடைத்து மனிதத்தை உயிர்ப்பித்திருக்கிறார் சைந்தவி.
இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அர்ச்சனா கேட்ட ஒரு கேள்வியால் சைந்தவி கண்ணீர்விட்டு அழுத தும் அப்பாவைக் கட்டி அழுததும் நெஞ்சில் நின்றவை.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனாவின் பங்கும் பழகும் பாங்கும் அரவணைத்துப் புரியவைக்கும் மன சூட்சுமமும் ஆர்ப்பரிக்கும் அருவி ஓசைக்குரியது.
பொழுதுபோக்கு ஊடகங்கள் சினிமா, குடும்பத்தைப் பந்தாடும் வில்லிகளாகப் பெண்களைக் காட்டி வன்முறையை அரங்கேற்றம் செய்யும் தொடர்களின் நச்சுக் காற்றிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் ஒரு ஷோவாக சரிகமப இருக்கிறது.
அதிலும் யாருக்குப் பாடலை அர்ப்பணிக்கிறார்கள் என்ற வரலாற்றின் பின்னால் மிகப்பெரிய சமூகப் புரிதல் இருக்கிறது.
உறவினரிடம் காட்டும் பாசம், அப்பா அம்மா, சித்தப்பா, அக்கா, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக என போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த பாடல் தேர்வு சமத்துவத்தை , சுதந் திரத்தை, சகோதரத்துவத்தை மீட் டெடுக்கிறது.
பெற்றோரின் மதிப்பை அவர் களின் விழுமியத்தைக் காக்கும் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
*தெய்வங்கள் எல்லாம் தோற்றே
போகும் தந்தையின் அன்பின் முன்னே
* உன்னப்பெத்த ஆத்தா என்னப்
பெத்துப்போட்டா
* நானாக நானில்லை தாயே
* மலர்ந்து மலராத பாதி மலர்போல
-ஈழ உயிர்களின் மரண ஓலத்தை மறக்காத மண்ணின் விடுதலையை நினைந்து அவர்களின் பெருமைக்காகப் பாடியது என அந்த நிகழ்வில் தேர்வுசெய்திருக்கும் பாடல்கள் மனதை உலுக்கு கின்றன.
இளையராஜா இசை, ஏ .ஆர். ரஹ்மான் இசை, எஸ்.பி.பி. குரலுக்கு அடிமையாகும் மனம் என எல்லாமே இளைய சமுதாயம் சரியான திசைக்கு நகர்கிறது என சொல்லலாம்.
நடுவர்களின் உற்சாக ஊக்கம் நிறைந்த ஆக்கபூர்வமான விமரிசனங்கள் ஜீ டி.வி.யின் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருக்கத்திற்கு மட்டும் எனச் சுருக்கிவிட முடியாது.
இந்தச் சமூகம் அன்பினால் கட்டப் பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. சமமற்றவர்களை மையத்திற்குள் இணைப்பது என்ற மிகப்பெரிய புரிதலை இந்நிகழ்ச்சி முரசடித்து அறிவிக்கிறது.
பெரியாரைப் பாடியதற்காக சபைகளிலிருந்து ஒதுக்கிவைக்கப்படும் அரசியலை எதிர்த்து கர்நாடக இசைப்பாடகர் மகசசே விரு தாளர் டி.எம்.கிருஷ்ணா ஒரு கலகக்காரராக இருப்பதால் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகளை நாம் அறிவோம்.
அதற்கெல்லாம் பதில் சொல்வதைப் போல இந்த சரிகமப நிகழ்வு நடந்திருப்பது மகிழ்ச்சியின் நெகிழ்வு தருணம். பெரியாரியம் இங்கே கோலோச்சுவதை உணர்ந்து நெகிழ முடிகிறது.
அப்படியே வீரபாண்டி கையில் இருக் கும் கயிற்றையும் அகற்றச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்து கள்.