ஒருவருக்கு சமுதாயத்தில் நல்லபெயர் இருக்கவேண்டும் என்றால் பேச்சு சாதுர்யமும், நாக்கு சுத்தமும் வேண்டும். உடலில் எலும்பில்லாதது நாக்கு. அதை எப்படிவேண்டுமானாலும் சுழலவிடாமல் சிந்தித்துப் பேசுவது சிறப்பு. வசீகரமான பேச்சுத் திறனும், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
மாற்றி மாற்றிப் பேசுவது, தான் என்ற அகங்காரத்தில் பேசுவது, தன்னை மட்டும் உயர்த்திப் பேசுவது பிறரை கிண்டல்செய்து பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றால் மற்றவர்களின் மனம் புண்படுவதுடன், இப்படிப் பேசுபவர்களைக் கண்டாலே யாருக்கும் பிடிக்காது. இவரிடம் பேசுவதை விட சும்மா இருக்கலாம் என ஒதுங்கிக்கொள்வார்கள்.
சிலர் வாயைத் திறந்தாலே பேச்சுகள் அனைத்தும் அபசகுணமாகவே இருக்கும். இவர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பிருக்காது.
எலும்பில்லாத நாக்கு ஏன் இப்படி சுழன்றுகொண்டிருக்கிறதென்று ஜோதிடரீதியாக ஆராய்ந்தால், ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடான வாக்கு ஸ்தானமே காரணமாக இருக்கும்.
வாக்கு ஸ்தானமான 2-ஆம் வீடு பலம்பெற்று, 2-ஆம் அதிபதியும் ஆட்சி, உச்சம்பெற்று, பேச்சுக்குக் காரகனான புதன் பகவானும் பலம்பெற்று ஒருவர் ஜாதகத்தில் இருக்குமேயானால் அவருக்கு வாக்கால்லி பேச்சால் வாழ்வில் உயரக்கூடிய அமைப்பைக் கொடுக்கும்.
பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவானின் பார்வை 2-ஆம் வீட்டிற்கும், 2-ஆம் வீட்டின் அதிபதிக்கும் புதனுக்கும் இருந்தால் அவருடைய பேச்சு ரசிக்கும்படியாக இருக்கும். பலருக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல், கல்வி போதிக்கும் அமைப்புண்டாகும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். எங்கு சென்றா லும் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய அளவுக்கு வாக்கு வண்மையை உண்டாக்கிக்கொள்வார்.
குரு, புதன் பலம்பெறுவது மட்டுமல்லாமல், 2-ல் வளர்பிறைச் சந்திரன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் நல்ல கற்பனை சக்தி, மற்றவர்களை வசீகரப்படுத்தும் பேச்சு வலிமை ஏற்படும். சுப கிரகங்கள் 2-ல் அமைந்து 10-ஆமதிபதிக்கு 2-ஆமதிபதி தொடர்பிருந்தால் பேச்சால், வாக்குத் திறனால் சம்பாதிக்கும் பலமுண்டாகும். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் வாய்ப்பு, மற்றவர்களுக்கு அறிவுரைகூறும் திறன், பேசி சம்பாதிக்கும் பணிசெய்யும் வாய்ப்பு உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் 2-ஆமதிபதியும், புதனும், 6-ஆமதிபதியின் சேர்க்கைபெற்று பாவ கிரகங்களின் பார்வைபெற்றா லும், குரு பகவான் 6-ஆமதிபதியின் சேர்க்கைபெற்றாலும், 2-ஆமதிபதி வலுவிழந்திருந்தாலும் பேச்சால் வீண் பிரச்சினைகள், தேவையற்ற பகைகளை எதிர்கொள்ள நேரிடும்.
புதன் பகவானும் 2-ஆமதிபதியும் சேர்க்கைபெற்று 6, 8, 12-ல் அமையப் பெற்றாலும், சனியின் வீடான மகரம், கும்பத்தில் அமைந்து சனி பார்வை பெற்றாலும், பாவகிரக நட்சத்திரத்தில் இருந்தாலும் நாக்கு சுத்தமோ, வாக்கு சாதுர்யமோ இருக்காது. தன்னுடைய வளவள பேச்சினாலேயே பல அரிய வாய்ப்புகளை இழப்பார். எந்த இடத்தில் எதைப் பேசவேண்டுமோ அதைவிடுத்து சம்பந்தமே இல்லாமல் பேசி பிரச்சினைகளை எதிர்கொள்வார்.
ஜென்ம லக்னத்திற்கு 2-ல் பாவிகள் அமையப்பெற்றால் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். 2-ல் பாவிகள் அமையப்பெற்றவர்கள் என்ன பேசுகிறோம் என யோசிக்காமல், மற்றவர்கள் மனம் புண்படுமளவுக்குப் பேசிவிடுவார்கள். பேச்சால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். குறிப்பாக 2-ல் அமையப்பெற்ற பாவ கிரகங்களின் தசாபுக்திகள் வரும் காலங்களில் வீண் சண்டை, சச்சரவு, தகராறு, வாக்குவாதங்கள் போன்றவை உண்டாகும்.
2-ல் சூரியன் செவ்வாய்
அமையப்பெற்றால் பேச்சில் வேகம், பேச்சில் ஒரு அதிகாரத்துவம் இருக்கும். சுபர் பார்வையுடன் இருந்தால் தன்னுடைய பேச்சுத்திறனால் அதிகாரப் பதவிகளை வகிக்கும் வாய்ப்பு ஏற்படும். அதுவே பாவகிரகத் தொடர்புடன் இருந்தால் ஜாதகரின் பேச்சைக்கண்டு மற்றவர்கள் அஞ்சும் சூழ்நிலை, மற்றவர்களிடம் வீண் பொல்லாப்பை சேர்த்துக்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.
2-ல் சனி அல்லது ராகு அமைந்து சுபர் பார்வையில்லாமல் இருந்தால், சொல்லவே வேண்டாம்; பேச்சால் வீண் பிரச்சினைகளையும் உடன் இருப்பவர்களிடம் பகையும் ஏற்படும். பொதுவாக 2-ல் பாவிகள் அமையப்பெற்றவர்கள் பேச்சைக் குறைத்துக்கொள்வது, எது பேசுவதென்றா லும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துப் பேசுவது நல்லது.