ஜோதிடத்தில், ஒரு ராசிக்கு அல்லது ஒரு கோளுக்கு இருபுறமும் அசுப கிரகங்கள் நிற்பதை பாப கர்த்தாரி யோகம் (தோஷம்) என்பர். மேலும் சிலர், பாவ கிரகங்களின் சேர்க்கை, பார்வை, பாவ- அசுப கிரகங்களின் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால்கூட பாப கர்த்தாரி யோகத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் ராசி, கிரகம் ஆகியவற்றின் இருபுறமும் பாவ கிரகங்கள் இருப்பதே பாப கர்த்தாரி யோகம் எனலாம்.
இந்த யோகம் இருப்பின், அந்த ஜாதகர் கிழிந்த ஆடை அணிவார்; மகிழ்ச்சி இல்லாதவர்; உடல் ஊனம் ஏற்படுமென்று கூறப்பட்டுள்ளது. இரு பாவர்களிடையே சிக்கிக்கொண்டிருக்கும் பாப கர்த்தாரி யோகம்பெற்ற கிரகத்தின் தசை, புக்தி, அந்தர காலத்தில் ஒரு நன்மையையும் எதிர்பார்க்க முடியாது.
சில ஜாதகங்களில், ஒரு சுபகிரகம் அனேகமாக இவ்வாறு அகப்பட்டுக்கொண்டு விழிக்கும் அவலநிலை ஏற்படுவதுண்டு.
அதற்கே ஜாதகரின் வாழ்வு, அந்த சுபகிரகம் சார்ந்த நிகழ்வுகளில் "ஃபெயில் மார்க்' எடுப்பது போல் அல்லாடும். இதில் மிகச்சில ஜாதகர்களுக்கு, இருக்கும் அத்தனை கிரகங்களும் பாவர்களிடையே அகப்பட்டு, ஜாதகர்கள் பாக்குவெட்டியில் சிக்கிய பாக்குபோல விழிபிதுங்கிக் கொண்டிருப்பர்.
உதாரண ஜாதகம் 1-ல் சந்திரன் என்னும் சுபகிரகம் கேது, செவ்வாய் என்னும் இரு பாவர்களிடையே அகப்பட்டுக் கொண்டுள்ளது. சுக்கிரன், குரு ஆகிய இரு சுப கிரகங்களும் செவ்வாய், சனி என்னும் இரு அசுபர்களிடையே நசுங்கிக் கொண்டுள் ளன. புதன் என்னும் சுபர், சனி மற்றும் ராகுவுக்கிடையே அகப்பட்டுக் கொண்டுள்ளது. இந்த ஜாதகம் முழுமையான பாப கர்த்தாரி ஜாதகம்.
இந்த ஜாதகருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் பேசிப்பேசியே தன் வாழ்க்கையைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டுள்ளார். வாழ்வில் நல்ல விஷயம் நடப்பதென்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இவரது வாழ்வின் பின்னடைவுக்கு இவரே முழுமுதற் காரணமாக உள்ளார். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பர். வாழ்வில் ஒரு சாண் அளவுகூட ஏறாமலேயே நான்குமுழ அளவு சறுக்கிக்கொண்டுள்ளார்.
உதாரண ஜாதகம் 2-ல் குரு பகவான், செவ்வாய் மற்றும் ராகுவுக்கிடையே உள்ளார். சுக்கிரன், கேது மற்றும் சனிக்கிடையே சிக்கிக்கொண்டுள்ளார். புதன், கேதுவுடன் ஒரே வீட்டில் இருக்கிறார்.
சந்திரனுக்கு 12-ல் ராகு அமர்ந்துள்ளார். இதுவும் ஒருவித தோஷம்தான்.
இந்த ஜாதகத்தில் புதன், செவ்வாய் என்னும் இரு கிரக உச்சமும், செவ்வாய்- சனி பரிவர்த்தனையும், ஆட்சிபெற்ற சுக்கிரனும் உள்ளனர். இதனால் ஒருவாறு திருமணம் நடந்து, குழந்தையும் பிறந்தாயிற்று. எனினும் வாழ்வில் எந்த நிம்மதியுமில்லை. ஒவ்வொரு நாளையும் துன்பத்துடன் கழிக்கிறார்.
இத்தகைய ஜாதகம் கொண்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால், அவர் களது வாழ்வுநிலையை கவனமாக அவதானித்தல் அவசியம்.
ஏனெனில் எந்தவொரு விஷயமும் செயலும் இவர்களுக்கு இந்த நிமிடத்தில் நடந்துவிடும் என்னும் கணத்தில்- அந்த நொடியில் எல்லாம் உடைந்து சிதறிவிடும்; கூடிவராது! ஒரு குடும்பத்துக்கு இதுபோன்று ஒரு ஆள் இருந்தால் போதும்; அந்த குடும்பம் தலையெடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும். இவர்களது துன்பத்தைப் போக்குவதற்கே நேரம் சரியாகப் போய்விடுவதால், மற்ற குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றம் தடைப்படும்.
இதுபோன்ற ஜாதகர்களை கவனித்துப் பாருங்கள். எந்த செயலையும் யாராவது வந்து செய்துகொடுக்க வேண்டுமென்று மிகவும் எதிர்பார்ப்பார்கள். தானாக எந்த செயலையும் செய்யமாட்டார்கள். செய்யத் தெரியாது என்பதே உண்மை. இதிலும் பிறர் செய்த செயலுக்கு நன்றி கூறாமல் குற்றம் சுமத்துவார்கள். இத்தகைய பாப கர்த்தாரி யோகமுள்ள ஜாதகரின் குடும்பத்தினர்தான் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே இவர்கள் விஷயங்களை இவர்களே கவனித்துக் கொள்ளும்படி இவர்களை வடிவமைத்து உருவாக்கவேண்டும். பிறரைப் சார்ந்தவராக இல்லாமல், தற்சார்பு கொண்டவராக மாற்றவேண்டும். அவர்கள் தங்களின் குறைகளைச் சொல்ல ஆரம்பித்தாலே அவர்களுடன் பேசுவதை நிறுத்திவிடுங்கள்.
அவர்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக உதவி செய்யுங்கள். வாழ்வின் ஏற்றத் தாழ்வுக்கு அவர் களே பொறுப்பென உணர்த் துங்கள்.
அவர்களது ஜாதகத்தை வருடத்துக்கு ஒருமுறையாவது பிரம்மா கோவிலில் வைத்து வணங்கவும். தினந் தோறும் கோளறு பதிகம் கூறிவருவது அவசியம். திருப்பரங்குன்றம் சென்று வணங்கலாம். விநாயகரை அறுகம்புல் வைத்து வழிபடவேண்டும். தினமும் சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடவேண்டும். "வில்வ ஸ்பரிசம் பாபநாசம்' என்று கூறப்பட்டுள்ளது. பசுவுக்கு கீரை, தீவனம் கொடுக்கலாம். உங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள்.
கடந்தபிறவியில் செய்த பாவமே இப்பிறவியில் பாப கர்த்தாரி யோகம் போன்ற மிகக் கொடுமையான ஜாதக அமைப்பைக் கொடுக்கிறது. அதனால் இப்பிறவியில் தீயவற்றை நீக்கி வாழ முயற்சிக்கவேண்டும். பிறரைப் பார்த்து பொறாமைகொள்ளாமல் இருப்பது மிக முக்கியமானது.
செல்: 94449 61845