Skip to main content

விஷ்ணு, ரெஜினா ஓகே... ஓவியா ஆர்மி பாவம் - சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம் 

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

விஷ்ணு விஷால் கரியரில் வெற்றிப் படங்களில் ஒன்றான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் எழுத்தாளரும், இயக்குனர் எழிலின் உதவி இயக்குனருமான செல்லா அய்யாவு இயக்கத்தில் காமெடி மசாலா படமாக வந்துள்ளது இந்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.

 

silukuvarpatti singam vishnu vishal



பயந்தாங்கோலி போலீஸ் சக்தியாக வரும் விஷ்ணு விஷால் காவல் நிலையத்தில் எடுபிடி வேலை செய்து வருகிறார். அதேநேரம் சென்னையின் பெரிய தாதாவும், பயங்கர கொலைகாரனுமான ரவுடி 'சைக்கிள் சங்கர்' என்ற பாத்திரத்தில் சாய் ரவி. அவர், அரசியல்வாதியான நிலக்கோட்டை நாராயனான மன்சூர் அலிகானை கொலை செய்ய சிலுக்குவார்பட்டிக்கு வருகிறார். போலீசார் வலைவீசி தேடி வரும் இவர் ஒரு பாரில் சாய் ரவி குடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறிய தகராறு ஏற்பட்டு விடுகிறது. இதைத் தடுக்க அங்கு வரும் விஷ்ணு விஷால், தவறுதலாக கூட்டத்தோடு கூட்டமாக அவரை அடித்துக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். சைக்கிள் சங்கர் பெரிய தாதா என்று தெரியாமலேயே அவரை சித்திரவதை செய்கிறார். ஒரு கட்டத்தில் சிறையிலிருந்து சைக்கிள் சங்கர் தப்பி, விஷ்ணு விஷாலை எப்படியாவது கொலை செய்வேன் என சபதம் எடுத்துச் செல்கிறார். இதனை அறிந்த விஷ்ணு விஷால் தலைமறைவாகி விடுகிறார். சிறுவயதிலிருந்து விஷ்ணு விஷாலும் நாயகி ரெஜினா கஸன்ட்ராவும் காதலிக்கின்றனர். அது ரெஜினாவின் தந்தைக்கு பிடிக்காததால் ரெஜினாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார். விஷ்ணு விஷால் ரவுடியிடமிருந்து தப்பித்தாரா, நாயகி ரெஜினா கெஸான்ட்ராவின் திருமணம் என்னவானது என்பதை 'கலகலப்பு'டன் சொல்லியுள்ளார் இயக்குனர் செல்லா அய்யாவு.

 

regina cassandra



முழுக்க முழுக்க காமெடி பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் பயந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்குப் பொருத்தமாக இருக்கிறார். ராட்சசனுக்குப் பிறகு ஒரு ரிலாக்ஸான படம் அவருக்கு. அவர் அவ்வாறு திட்டமிடவில்லையென்றாலும் கூட அவரது கரியர் அப்படி அமைவது நல்லதுதான். கதைத் தேர்வில் கவனமாக இருக்கும் விஷ்ணு நடிப்பில் இன்னும் தூரம் செல்லவேண்டியிருக்கிறது. சிரிக்கவைக்கும் நகைச்சுவையில் அவரது பங்கு என்று பார்த்தால் குறைவாகவே இருக்கிறது. நாயகி ரெஜினா கெஸான்ட்ராவிடம் 'நீங்க வந்தா மட்டும் போதுமென்று இயக்குனர் சொல்லிவிட்டார் போல... வந்து வந்து செல்கிறார், அழகாக. பிக்பாஸுக்குப் பிறகு ஓவியா நடித்து வெளியாகும் முதல் படம். நடன அழகியாக வந்து போகிறார். ஓவியா ஆர்மி காரர்கள் பாவம்.

முதல் பாதி சற்று மெதுவாக ஆரம்பித்து, பாத்திரங்களை அறிமுகம் செய்து, இரண்டு மூன்று டிராக்குகள் செட் ஆகி என நாம் சிரிக்கத் தொடங்க சற்று நேரம் எடுக்கிறது. அதன்பிறகு வேகமெடுத்து, இரண்டாவது பாதியில் ஜனரஞ்சகமாகவும் கலகலப்பாகவும் பயணிக்கும்படியான திரைக்கதையை அமைத்து பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார் இயக்குனர் செல்லா  அய்யாவு. ஏற்கனவே நாம் பலமுறை பார்த்துப் பழகிய காமெடி டெம்ப்ளேட் என்றாலும் அதை ரசிக்கும்படி கொடுத்து பழையதை எல்லாம் மறக்கச் செய்து சிரிக்க வைத்துள்ளார். ஆரம்ப கட்ட காட்சிகள் சற்று அயர்ச்சி, பின்னர் சில நல்ல காமெடி காட்சிகள், இரண்டாம் பாதியில் நாம் பார்த்துப்பழகிய வகை காமெடிகள்... இதுதான் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

 

oviya



படத்தின் குறைகளை மறைப்பது மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம். யோகி பாபு, கருணாகரன், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், மன்சூரலிகான், ஓவியா, சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர் ஆகியோர் அவரவர் வரும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்து தியேட்டர்களில் கைத்தட்டல்களை அள்ளுகின்றனர். காட்சிக்குக் காட்சி தொய்வு ஏற்படும் இடங்களில் எல்லாம் ஒவ்வொருவராக அதை சரி செய்கின்றனர். இந்தக் கூட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கள் யோகிபாபு, சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர். அதிலும் யோகிபாபுவின் டீ-ஷர்ட்களும் கவனிக்கவைக்கின்றன. கிளைமாக்சில் ஆனந்த் ராஜ் பாத்திரத்துக்குக் கொடுக்கும் ஃபிளாஷ்பேக் செம்ம ஐடியா. பல வருடங்களுக்குப் பிறகு பாட்டியாக வடிவுக்கரசி நடித்திருக்கிறார்.

பல தனிப்படைகள் தேடும் ரௌடியை ஒரு போலீஸ் ஸ்டேஷனில் யாருக்குமே தெரியாமல் இருப்பது, காமெடி செய்யும் யோகிபாபு டீம் திடீரென ரௌத்திரமாகி போலீஸ் ஸ்டேஷனை துவம்சம் செய்வது, அரதப்பழசான விஷ்ணு விஷாலின் மாறுவேட கான்செப்ட், சைக்கிளை துரத்தும் ஜீப், ஜீப்பைத் துரத்தும் ஆட்டோ, ஆட்டோவைத் துரத்தும் இன்னொரு வண்டி என பார்த்துப் பழகிய துரத்தல்கள்... இப்படி எக்கச்சக்க ஓட்டைகள், குறைகள் இருக்கின்றன. இருந்தாலும் சிரிக்கவைக்கும் சில செம்ம காமெடிகளின் தொகுப்பாக ஜெயிக்கிறது சிலுக்குவார்பட்டி சிங்கம்.

 

yogi babu and team



லியோன் ஜேம்ஸ்ஸின் பின்னணி இசை தனித்து கவனத்தை ஈர்க்கவில்லை. காட்சியோடு கடந்துபோகிறது. லட்சுமணனின் ஒளிப்பதிவு கலகலப்பான காட்சிகளை கலர்ஃபுல்லாகக் காட்டுகிறது. சிரத்தை எடுக்கவேண்டிய தேவை அவருக்கும் இல்லை.

காமெடி படங்கள் பார்க்கப்போனால் மூளையை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும், லாஜிக் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு. காமெடி படங்களிலும் கிளாஸிக் படங்கள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது கிளாசிக் காமெடி அல்ல, பேஸிக் காமெடி.  

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.