Skip to main content

எப்படி இருக்கிறது முத்தையாவின் விருமன்..? - விமர்சனம்

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

viruman movie review

 

பருத்திவீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம் படங்களுக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் மற்றொரு கிராமத்து கமர்ஷியல் திரைப்படம் விருமன். கொம்பன் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அவருடைய அக்மார்க் ஃபார்முலாவில் உருவாகி ரிலீசாகியுள்ள இப்படம் இவரின் முந்தைய படங்கள் பெற்ற வரவேற்பை பெற்றதா...?


தாசில்தார் பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளுக்கு நான்கு மகன்கள். அதில் நான்காவது மகன் கார்த்தி. கார்த்தி அப்பாவை காட்டிலும் அம்மா மேல் மிகுந்த பாசத்துடன் இருக்கிறார். இதற்கிடையே பிரகாஷ்ராஜ் தன் வீட்டு வேலைக்கார பெண்மணியுடன் முறையற்ற தொடர்பில் இருப்பதை மனைவி சரண்யா பொன்வண்ணன் பார்த்துவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார். தன் அம்மாவின் சாவுக்கு காரணமான அப்பா பிரகாஷ்ராஜை திருத்தி பழிவாங்க துடிக்கிறார் கார்த்தி. எலியும், பூனையுமாக இருக்கும் பிரகாஷ்ராஜ், கார்த்தி பகை இறுதியில் என்னவானது? தந்தை பிரகாஷ்ராஜை கார்த்தி பழிவாங்கினாரா, இல்லையா? என்பதே விருமன் படத்தின் மீதி கதை.

 

viruman movie review


தன்னுடைய ட்ரேட்மார்க் விஷயங்களான ஊர் பெருமை, குடும்ப பெருமை, பெண்களின் பெருமை, உறவுகளின் பெருமை, புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகளில், காதல் சென்டிமென்ட் என தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் இறக்கி ஒரு பக்காவான ஹிட் பார்முலாவில் உருவான கிராமத்து ஆக்ஷன் கமர்ஷியல் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. ஒரு மாஸ் ஹீரோவுக்கான காட்சி அமைப்பிற்கு என்னவெல்லாம் தேவையோ அதை சரியான அளவில் சரியான இடத்தில் பொருத்தி படத்தை ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர். அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும்படியான திரைக்கதையாகவே இருந்தாலும், சரியான விதத்தில் கோர்வையான காட்சிகள் அடுத்தடுத்து வந்து அயர்ச்சியை தவிர்க்கிறது. வித்தியாசமாக எதுவும் செய்யாமல் தனக்கு என்ன தெரியுமோ, தனக்கு என்ன வருமோ அதை சிறப்பான முறையில் செய்து கமர்சியல் ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் இயக்குநர் முத்தையா. முத்தையா படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்திலும் அதுபோலவே ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்து படத்திற்கு மிகப் பெரிய பக்கபலமாக மாறியுள்ளன. ஆக்சன் காட்சிகளுக்கு இணையாக செண்டிமெண்ட் காட்சிகளும், நக்கல் நய்யாண்டி காட்சிகளும் சரியான கலவையில் சிறப்பாக அமைந்து தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளது.

 

ஒவ்வொரு படத்துக்கும் தன் நடிப்பை அழகாக மெருகேற்றி வரும் கார்த்தி, இந்த படத்தில் விருமன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் மிகவும் கம்பீரமான, துடுக்கான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி தியேட்டரில் மீண்டுமொருமுறை கைதட்டல் பெற்றுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். அதேபோல் அட்ராசிட்டி செய்யும் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் எதார்த்தமான நடிப்பை ஜஸ்ட் லைக் தட் வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளார். இவருக்கும் பிரகாஷ்ராஜுக்குமான காட்சிகள் ஜனரஞ்சகமாக அமைந்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் பழைய நாஸ்டால்ஜியா பிரகாஷ்ராஜை நினைவுபடுத்தும் வகையில் கலாட்டாவான நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார்.

 

viruman movie review

 

படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் தனக்கு கிடைத்த குறைந்த ஸ்பேசில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு அறிமுக நடிகை என்ற உணர்வை தர மறுக்கிறார். கார்த்திக்கு டஃப் கொடுத்து நடித்து நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி உள்ளார். கார்த்தியின் நண்பராக வரும் சூரி கிடைக்கின்ற சின்ன சின்ன கேப்பில் கிடா வெட்டி சிரிக்க வைத்துள்ளார். இவர் ஆங்காங்கே அடிக்கும் ஒரு சில பஞ்ச் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. குஸ்தி வாத்தியாராக வரும் ராஜ்கிரண், அவரின் தம்பியாக நடித்திருக்கும் கருணாஸ், இந்துஜா ரோபோ சங்கர், மைனா நந்தினி ஆகியோர் அவரவருக்கான ஸ்பேசில் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை நிறைவாகச் செய்துள்ளனர். இவர்களைப் போலவே ஆர்கே சுரேஷ், சிங்கம்புலி, வடிவுக்கரசி, ஜி.எம் குமார், இளவரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் தங்களுக்கான வேலையை நிறைவாக செய்துள்ளனர்.

 

இந்தப்படம் இவ்வளவு பிரம்மாண்டமாக வருவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது ஒளிப்பதிவும், இசையும். கதையில் உள்ள பிரம்மாண்டங்களையும், லொக்கேஷன்களின் பிரமாண்டங்களையும் சிறப்பாக படம்பிடித்து காட்டியுள்ளது செல்வகுமாரின் கேமரா. பெரும்பாலான கிராமத்து அழகை வைடு ஆங்கிள் ஷாட்கள் மூலம் சிறப்பாக காட்சிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அதேபோல் படத்திற்கு இன்னொரு நாயகனாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அமைந்துள்ளது. இவரின் 'கஞ்சா பூ' பாடல் ஏற்கனவே ஹிட்டடித்த நிலையில் மற்ற பாடல்களும் தாளம் போட வைக்கின்றன. அதே போல் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிடும் பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களுக்கு கூஸ்பம்ப் மொமன்ட்ஸ்களை ஏற்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

 

படத்தின் கதையும், கதைக் களமும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய சில படங்களை ஞாபகப்படுத்துகிறதும், படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் குணமும், தன்மையும் ஏற்கனவே பார்த்தது போல் இருப்பதும், படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதும், அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பதும் மைனஸாக இருந்தாலும், திரைக்கதையின் வேகமும், காட்சிக்கு காட்சி இருக்கும் விறுவிறுப்பும், நல்ல செண்டிமெண்ட்டும்  கடைசிவரை ஒர்க் அவுட் ஆகியிருப்பதால் இப்படத்தை கட்டாயம் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.

 

விருமன் - கிராமத்து கமர்ஷியல் திருவிழா!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!