Skip to main content

இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டா என்ன ஆகும்..? - ‘டிக்கிலோனா’ விமர்சனம்

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

santhanam starring dikkiloona movie review

 

காதலித்து திருமணம் செய்த ஒருவனின் வாழ்க்கை, திருமணத்திற்குப் பிறகு கசப்பாக மாறுகிறது. இதனால் வாழ்க்கையை வெறுத்த அவனுக்கு, கடந்த காலத்திற்குச் சென்று தனது தவறுகளை சரிசெய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால்...? இப்படியொரு கதைக்களத்தை நகைச்சுவையைப் பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படமே ‘டிக்கிலோனா’.

 

தேசிய ஹாக்கி வீரர் ஆகும் கனவில் இருக்கும் சந்தானம், அனாகாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஹாக்கி வீரர் கனவு கைகூடாமல் போக, ஈ.பியில் லைன் மேனாக வேலைக்குச் சேர்கிறார். காதலின்போது இனித்த வாழ்க்கை, திருமணத்திற்குப் பிறகு கசக்க துவங்குகிறது. அந்த சமயம் டைம் டிராவல் மெஷின் கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு ஆராய்ச்சி குழுவைச் சந்திக்கிறார் சந்தானம். அக்குழுவில் உள்ள யோகிபாபு மூலம் 2020இல் தனக்கு நடந்த திருமணத்தை நிறுத்திவிட்டு வாழ்க்கையை சரி செய்ய கடந்த காலத்துக்குச் செல்கிறார். அதேசமயம் கடந்த காலத்தில் இருக்கும் திருமணமாகாத சந்தானத்தை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறார். இருவரும் மாறி மாறி அந்தந்த காலக்கட்ட வாழ்கையை அனுபவிக்கிறார்கள். இதையடுத்து கடந்த காலத்துக்குச் சென்ற ஈ.பி. சந்தானம் திருமணத்தை நிறுத்தினாரா, இல்லையா? நிகழ்காலத்திற்கு வந்த கடந்தகால சந்தானத்தின் நிலை என்னவானது? என்பதே ‘டிக்கிலோனா’ படத்தின் மீதி கதை.

 

santhanam starring dikkiloona movie review

 

உடல் மெலிந்து காணப்படும் நடிகர் சந்தானம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமெடியில் கம்பேக் கொடுத்துள்ளார். இவர் தொடர்ந்து தனக்கு செட்டாகும் கதைகளைக் கவனமுடன் தேர்வுசெய்து நடித்து வெற்றிபெற்று வந்தாலும், அண்மைக்காலங்களில் ‘A1’ படத்தைத் தவிர்த்து மற்ற படங்களில் சந்தானத்தின் காமெடி சுமாராகவே இருந்துவந்தது. அதை தற்போது ஓடிடியில் ரிலீசாகி இருக்கும் ‘டிக்கிலோனா’ படம் மூலம் மாற்றியமைத்துள்ளார். காமெடி காட்சிகள் மட்டுமல்லாமல், செண்டிமெண்ட் காட்சிகளில் கூட அனுதாபம் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். 

 

வெவ்வேறு டைம்லைன்களில் பயணிக்கும் ஒரு குழப்பமான கதையைத் தெளிவாகவும், காமெடியாகவும் சொன்னதற்கே அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகியைப் பாராட்டலாம். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் மனிதனின் நிலை என்னவாகும்? என்ற சோஷியல் மெசேஜை சிறப்பாகவும், ஜனரஞ்சகமாகவும் கூறி கைத்தட்டல் பெற்றுள்ளார். அதேசமயம் படத்தில் பங்குபெற்ற அனைத்து நடிகர்களுக்கும் சரிசமமான ஸ்பேஸ் கொடுத்து அவர்களின் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளார்.

 

santhanam starring dikkiloona movie review

 

நாயகிகள் அனாகா மற்றும் ஷ்ரின் ஆகியோர் அவரவருக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். தங்களுக்குக் கிடைத்த ஸ்க்ரீன் ஸ்பேஸ் சிறியதாக இருந்தாலும் அதில் காமெடி, எமோஷனல் என அனைத்திலும் இருவருமே நன்றாக ஸ்கோர் செய்துள்ளனர். யோகிபாபு சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். அதேபோல் மூத்த நடிகர் ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் திரையில் தோன்றும்போதெல்லாம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக இவர்களை எல்லாம் தாண்டி ப்ரீ- கிளைமாக்ஸில் வரும் நடிகர் மாறன் காமெடியில் அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்குத் தனக்குக் கிடைத்த ஸ்பேஸில் சிக்சர் அடித்துள்ளார். அதேபோல் நடிகர் சித்ரா லட்சுமணனும் காமெடியில் கலக்கியுள்ளார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மொட்டை ராஜேந்திரன், சேசு, அருண் அலெக்சாண்டர், ஷா ரா, இட்டிஸ் பிரஷாந்த் ஆகியோர் தங்களது பங்குக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வரும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உத்வேகம் அளிக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்து மறைந்துள்ளார்.

 

யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'பேர் வெச்சாலும்' ரீமிக்ஸ் பாடல் தாளம் போட வைத்துள்ளது. பின்னணி இசை மூலம் காமெடி காட்சிகளை என்ஹான்ஸ் செய்துள்ளார். அர்வி ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கிறது. ஜோமினின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்துக்கு வேகம் கூட்டியுள்ளது.

 

பொதுவாக டைம் மெஷின் படங்கள் என்றாலே திரில்லர் வகை படங்களே அதிகமாக வெளிவரும். அதில் காமெடி படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிலும் வெற்றிபெற்ற காமெடி படங்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. அப்படி குறைவான எண்ணிக்கையில் உள்ள படங்களின் வரிசையில் ‘டிக்கிலோனா’ இணைந்ததா என்றால் சிரித்துக்கொண்டே ஆம்! என்று சொல்லலாம்.

 

டிக்கிலோனா - சிரிப்பு கலந்த சிந்தனை எக்ஸ்பிரஸ்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.