Skip to main content

ஒரு நாயின் அன்கண்டிஷனல் லவ் ஸ்டோரி! - 777 சார்லி விமர்சனம்

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

charlie 777 movie review

 

ஒரு படம் சரி இல்லை என்றால், உப்புமா படமாக தெரிந்தால், 'ச்சீ இது கன்னட படம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க' என்று ரசிகர்கள் ஒரு காலத்தில் கமெண்ட் செய்வார்கள். அப்படி மொக்க படம் என்றாலே கன்னட படம் என்று சொன்ன காலம் போய் தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு தரமான படங்களை தயார் செய்து வெளியிட்டு வருகின்றது கன்னட சினிமா. குறிப்பாக கே ஜி எஃப் படம் கொடுத்த வெற்றி கன்னட சினிமா மேல் ஒரு மரியாதையை உண்டாக்கியது. அந்த வகையில் தற்போது கன்னட சினிமாவின் தரத்தை மேலும் உயர்த்தி பிடிக்கும் முயற்சியாக உருவாகி வெளியாகியுள்ள படம் 777 சார்லி. கே ஜி எஃப் படம் கன்னட திரையுலகிற்கு கொண்டுவந்த நல்லபெயரை இப்படம் தக்கவைத்து கொண்டதா, இல்லையா?

 

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாத இளைஞராக வரும் ரக்ஷித் ஷெட்டி தனக்கென்று ஒரு உறவு, நட்பு என எதுவும் இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என தனியே வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இவர் வீட்டிற்கு ஒரு நாய் அடைக்கலம் தேடி வருகிறது. முதலில் அந்த நாயை வெறுக்கும் ரக்ஷித் ஷெட்டி பிறகு அந்த நாயுடன் நெருங்கி பழகி விடுகிறார். நாயில்லாமல் நானில்லை என மாறிவிடும் அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர் ஆசை ஆசையாக வளர்க்கும் அந்த நாய்க்கு கேன்சர் நோய் ஏற்படுகிறது. இதனால் மனமுடைந்த ரக்ஷிட் ஷெட்டி நாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற போராடுகிறார். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

 

charlie 777 movie review

 

கிரிக் பார்ட்டி, அவனே ஸ்ரீமன் நாராயணா போன்ற படங்கள் மூலம் அறியப்பட்ட கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள படம். வெளியிலிருந்து பார்த்தால் ஒரு சாதாரண படமாக தெரியும் இப்படம், எடுக்கப்பட்ட விதத்தில் பார்ப்பவர் கண்களை கலங்க செய்துள்ளது. பொதுவாக நாய் படம் என்றாலே நாயின் குறும்புத்தனம், அதனுடைய சாகசம் என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமாகவே எடுக்கப்படும் படங்களின் மத்தியில் ஒரு மனிதருக்கும் நாய்க்குமான பாசப் போராட்டத்தை மிக அருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் கிரன் ராஜ் கே. படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை நாய்க்கும் ரக்ஷித் ஷெட்டிக்குமான கெமிஸ்ட்ரி அருமையாக ஒர்க் அவுட் ஆகி படம் பார்ப்பவர் கண்களை கண்ணீரில் மிதக்க செய்துள்ளது. குறிப்பாக செல்லப்பிராணிகள் விரும்பாதவர்கள் கூட கதையோடு ஒன்றிவிடும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இப்படம். தனியாக வாழும் ஒரு மனிதனுக்கும் அவனிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை வெளிப்படுத்தும் நாய்க்குமான பாசப்பிணைப்பை எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் காட்டி ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் கிரன் ராஜ் கே. மீண்டும் மனதைத்தொடும் படியான ஒரு படத்தைக் கொடுத்துள்ளது கன்னட சினிமா. 

 

நாயகன் ரக்ஷித் ஷெட்டி வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாத இளைஞராக வருகிறார். அதற்கேற்றாற்போல் அவருடைய தோற்றமும், நடை உடை பாவனையும் சிறப்பாக அமைந்து சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். நாயுடன் தோன்றும் இவரது நடிப்பு பார்ப்பவர் கண்களை கலங்க செய்துள்ளது. இவருக்கு அடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது அந்த நாய் மட்டுமே. சார்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நாய் நாயகனுக்கு நிகராக டப் கொடுத்து நடித்துள்ளது. காட்சிக்கு காட்சி காலைத் தூக்குவது, கட்டிப்பிடிப்பது, கூப்பிடும் பொழுது திரும்பி பார்ப்பது, அழைக்கும்போது வருவது, சொல் பேச்சு கேட்பது, சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ் கொடுப்பது என ஒரு தேர்ந்த நடிகரை போலவே நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது சார்லி நாய். நாய் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த நாய் பிடிக்கும் அளவிற்கு சிறப்பான நடிப்பை சார்லி நாய் வெளிப்படுத்தியுள்ளது. சார்லி நாயை நன்றாக தயார் செய்துள்ளார் அதனுடைய பயிற்சியாளர் பிரமோத். அவருக்கு பாராட்டுக்கள். அதேசமயம் சார்லி நாயை அது பாணியிலேயே காத்திருந்து, காத்திருந்து சிறப்பாக வேலை வாங்கியதற்கு இயக்குநருக்கும் பாராட்டுக்கள். 

 

charlie 777 movie review

 

ரக்ஷித் ஷெட்டி மற்றும் சார்லி நாய் தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களுக்கும் படத்தில் அதிக வேலை இல்லை. இந்த இருவருமே படம் முழுவதையும் தாங்கி பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து சம்பிரதாய நாயகியாக நடித்திருக்கும் சங்கீதா ஸ்ரிங்கேரி கடமைக்கு வந்து சென்றுள்ளார். அதேபோல் டாக்டராக வரும் ராஜ் பி செட்டி, சிறப்புத் தோற்றத்தில் வரும் பாபி சிம்ஹா, எதிர்வீட்டு குழந்தையாக வரும் சிறுமி அத்ரிகா ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து மனதில் பதிகின்றனர். 

 

படத்தின் பாடல்களை காட்டிலும் நோபின் பாலின் பின்னணி இசை பல இடங்களில் பார்ப்பவர் கண்களை கலங்க செய்யும்படி செய்துள்ளது. அந்த அளவு நெகிழ்ச்சியான இசையை உணர்ச்சிப்பூர்வமாக கொடுத்துள்ளார். அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவில் நாய் சம்பந்தப்பட்ட காட்சிகளும், பனிமலை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

 

முதல் பாதி முழுவதும் சற்று கலகலப்பாகவும் இரண்டாம் பாதி முழுவதும் உணர்ச்சி பூர்வமாக கண்களை கலங்கவைத்து நெகிழ்ச்சி ஏற்படும்படியும் உருவாகியுள்ளது இந்த 777 சார்லி திரைப்படம். இருந்தும் இரண்டாம் பாதியில் இருக்கும் நீளம் மட்டும் படத்திற்கு சற்று பாதகமாக அமைந்துள்ளது. இரண்டாம்பாதி நீளத்தை சற்று குறைத்து இருந்தால் இன்னமும் இந்த படம் நன்றாக பேசப்பட்டிருக்கும்.

 

777 சார்லி - அன்கண்டிஷனல் லவ்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.