Skip to main content

கௌதம் கார்த்திக் -க்கு கைகொடுத்ததா குடும்ப செண்டிமெண்ட்..? 'ஆனந்தம் விளையாடும் வீடு' - விமர்சனம்

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

aanandham vilaiyaadum veedu review

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ள மற்றுமொரு குடும்ப படம். ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அண்மையில் வெளியான 'ஆனந்தம் விளையாடும் வீடு' படம் குடும்ப ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா..?

 

குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ஜோமல்லூரி இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியின் மகனாக சரவணன். இரண்டாவது மனைவியின் மகனாக சேரன். இருவரும் அவரவர் குடும்பத்தில் மூத்த அண்ணன்கள். இவர்கள் இருவரும் தங்களது தம்பி, தங்கைகள் என குடும்பத்தோடு வெவ்வேறு வீடுகளில் வசிக்கின்றனர். இதில் சரவணன் மகளான வெண்பாவிற்கு திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு வெண்பாவின் பிரசவத்தை தங்கள் சொந்த வீட்டில் தான் பார்க்க வேண்டும் என்று குடும்பத்தார் எண்ணுகிறார்கள். இதற்காக சேரன் தனக்குச் சொந்தமான இடத்தை வீடு கட்ட சரவணனுக்கு கொடுக்கிறார். சரவணன் அந்த இடத்தில் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து ஒரே வீடாகக் கட்டி அனைவரும் ஒன்றாகக் கூடி வாழ எண்ணி வீட்டைக் கட்டுகிறார். இதைப் பிடிக்காத அங்காளி பங்காளிகள் வில்லன் டேனியல் பாலாஜியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தகராறு செய்கின்றனர். வீட்டைக் கட்ட விடாமல் தடுக்கின்றனர். சொத்து பிரச்சனை பூகம்பமாய் வெடிக்க இறுதியில் அங்காளி பங்காளிகள் வீட்டைக் கட்ட விட்டார்களா? இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

 

இது ஒரு குடும்ப படம் என்பதால் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் நந்தா பெரியசாமி. அது படத்துக்குச் சாதகமான அம்சம் என்றாலும் அவர்களைப் பயன்படுத்திய விதம் என்பது சற்று அயர்ச்சி தரும்படி இருப்பதால் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே படம் மெதுவாகச் செல்வது போன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறவு, விட்டுக் கொடுத்துச் செல்வது போன்ற நல்ல விஷயங்கள் படத்தில் காண்பிக்கப் பட்டாலும் அவை ரசிக்கும்படி இல்லாமல் நாடக தன்மையாக இருப்பது படத்துடன் நம்மை ஒன்றவைக்க மறுக்கிறது. குறிப்பாக அழுத்தமில்லாத சில செண்டிமெண்ட் காட்சிகளைச் சற்று குறைத்திருக்கலாம். செண்டிமெண்ட் காட்சிகள் அழுத்தம் குறைவாக இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. 

 

முதல் மனைவி குடும்பத்தின் மூத்த அண்ணனாக வரும் பருத்திவீரன் சரவணன் சாந்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்திச் சென்றுள்ளார். இரண்டாவது மனைவி குடும்பத்தின் மூத்த அண்ணனாக வரும் சேரன் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. இவர்களே கதையின் பிரதான நாயகர்களாக ஜொலித்துள்ளனர். சேரனின் தம்பியாக நடித்திருக்கும் நடிகர் சௌந்தரராஜா எதார்த்தமான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இவரது கதாபாத்திரமே படத்திற்குச் சற்று வேகத்தைக் கூட்டி உள்ளது. இவரது துடுக்கான நடிப்பும் மிடுக்கான நடையும் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது. இவருடன் இன்னொரு தம்பியாக நடித்துள்ள செல்லாவும் இவருக்கு ஈடுகொடுத்து நடிப்பில் டஃப் கொடுத்துள்ளார்.  

 

aanandham vilaiyaadum veedu review

 

சரவணனின் தம்பிகளாக வரும் நடிகர்கள் விக்னேஷ், சினேகன், ஆகியோர் தனக்கு கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தின் இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் கௌதம் கார்த்தி ஆர்ப்பாட்டமில்லாத அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முந்தைய படங்களைவிட முதிர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக நடித்துள்ள ராஜசேகர், ஜீவிதா நட்சத்திர தம்பதிகளின் மகளான சிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில் புதுமுகம் போல் தெரியவில்லை. மிரட்டல் வில்லனாக வரும் டேனியல் பாலாஜி, பிற்பாதியில் வழக்கமான வில்லனாக வந்து சென்றுள்ளார். மற்றபடி படத்தில் நடித்துள்ள மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே அவர் அவருக்கு கொடுத்த வேலையை நிறைவாகச் செய்துள்ளனர். 

 

சித்து குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். உருக வைக்கும் படியான பின்னணி இசையில் கலக்கியுள்ளார். படத்தில் இன்னொரு நாயகனாக இவரது இசை அமைந்துள்ளது. பால பரணியின் ஒளிப்பதிவில் கிராமத்து வீடு சார்ந்த காட்சிகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

படத்தின் நீளம், திரைக்கதை மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் சற்று கவனமாக இருந்திருந்தால் நல்ல குடும்பப் படப் பட்டியலில் இப்படம் இணைய நல்ல வாய்ப்பு இருந்திருக்கும்.

 

ஆனந்தம் விளையாடும் வீடு - செண்டிமெண்ட் தூக்கல்!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!