Skip to main content

கோடிகளை கொட்டிக்கொடுத்த நிறுவனம்; நோ சொன்ன யாஷ் - குவியும் பாராட்டுகள் 

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Yash refuses multi crore paan masala ad

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வசூல் ரீதியாக பாக்ஸ்ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் குறித்து ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துவந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு அக்ஷய் குமார் வருத்தம் தெரிவித்தார். ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஒப்பந்தகாலம் காலம் முடிவடையும்வரை அந்த விளம்பரம் ஒளிபரப்பாகும் என்றும் இனி வரும் காலங்களில் இத்தகைய விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்றும் உறுதியளித்தார். மேலும், இந்த விளம்பரத்திற்காக வாங்கிய பணத்தை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன் பிறகே, இந்த சர்ச்சை மெல்ல ஓய்ந்தது.

 

இந்த நிலையில், இது போன்ற பான்மசாலா விளம்பரத்திற்காக ஒரு நிறுவனம் நடிகர் யாஷை சமீபத்தில் அணுகியதாகவும், அந்த விளம்பரத்தில் நடிக்க யாஷ் மறுத்துவிட்டதாகவும் யாஷின் விளம்பர ஒப்பந்தங்களை கவனித்துவரும் தனியார் ஏஜென்சி தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரட்டை இலக்க கோடி மதிப்பிலான பான்மசாலா விளம்பர வாய்ப்பை சமீபத்தில் நாங்கள் மறுத்தோம். யாருடன் இணையவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். யாஷுக்கு கிடைத்துள்ள பேன் இந்தியா அந்தஸ்தை, அவரைப் பின்பற்றும் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை வழங்கவும், எங்களுடைய நேரத்தையும் வேர்வையையும் மனசாட்சியுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து பயன்படுத்த விரும்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியானது முதலே நடிகர் யாஷிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யஷுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
kiara advani to pair with yash in toxic movie

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

kiara advani to pair with yash in toxic movie

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“இதுபோன்ற சோகமான சம்பவங்கள் பயம் கொள்ள செய்கிறது” - யஷ் வருத்தம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
yash visited 3 fans passed away while his birthday celebration

கே.ஜி.எஃப் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற கன்னட நடிகர் யஷ். நேற்று அவரது பிறந்த தினத்தை, கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், பட்டாசு, கேக் வெட்டுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சரங்கி கிராமத்தில், இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முற்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த கட் அவுட்டை நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த பேனர், மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரச, அதிலிருந்து மின்சாரம், கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே ஹனுமந்த் (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான மூவரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, யஷ் அந்த உயிரிழந்த ரசிகர்களின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீங்கள் முழு மனதுடன் எங்கிருந்து வாழ்த்தினாலும் அதுவே சிறந்த வாழ்த்தாக அமையும். இதுபோன்ற சோகமான சம்பவங்கள் எனது பிறந்தநாளையே கொண்டாட பயம் கொள்ள செய்கிறது. இப்படி காட்டுவது மனப்பான்மை அல்ல. தயவு செய்து உங்கள் அன்பை இப்படி காட்டாதீர்கள். பேனர்கள் வைக்காதீர்கள், பைக் சேஸ்கள் செய்யாதீர்கள், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்காதீர்கள். என்னை ரசிப்பவர்களும் என்னுடைய ரசிகர்களும், என்னைப் போலவே வாழ்க்கையில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம்.

நீங்கள் என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்து மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுங்கள். உங்கள் குடும்பங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே. அவர்களைப் பெருமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருங்கள். எனது ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தி பிரபலமடைவதில் எனக்கு விருப்பமில்லை. என் ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்வதை எப்போதும் குறைத்துக் கொள்வேன். நீங்கள் என்னை மதிக்கிறீர்கள் என்றால், முதலில் பொறுப்பாக இருங்கள். இந்த ஆண்டு, கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை. நம் முடிவில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதனால் தான், அதை எளிமையாக வைத்து, குடும்பத்துடன் மட்டும் கொண்டாட முடிவு செய்தேன்,'' என்றார். பின்பு உயிரிழந்த குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் உறுதி அளித்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து நலம் விசாரித்தார்.