Skip to main content

உங்களுக்குப் பிடிக்கல; ஆனால் மக்களுக்குப் பிடிச்சிருக்கு... பத்திரிகையாளரை அதிரவைத்த டி.ராஜேந்தர்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

T. Rajendar

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் நடிகர் டி.ராஜேந்தர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"வாழ்க்கையில் தன்னம்பிக்கை என்பது மிகமுக்கியம். அது இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். தன்னம்பிக்கையின் சின்னம் என்பதற்குப் பல துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மனிதர்களை உதாரணமாகக் கூறலாம். அந்த வகையில், நடிகர் டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கை குறித்து உங்களுக்குக் கூறுகிறேன். 1980ஆம் ஆண்டு முதல்முறையாக டி.ராஜேந்தரை நான் சந்தித்தேன். இப்போது அவரிடம் இருக்கும் தன்னம்பிக்கை, அன்றும் அவரிடம் இருந்தது. அப்போது 'பிலிமாலயா' பத்திரிகையில் இணையாசிரியராக நான் பணியாற்றிவந்தேன். அந்தச் சமயத்தில் என் நண்பர் ஒருவர், 'ஒரு தலை ராகம்' படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய டி.ராஜேந்தர் தற்போது ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார், அவரை உங்கள் பத்திரிகைக்காக நேர்காணல் செய்யுங்கள்... நல்ல திறமையான மனிதர் என என்னிடம் கூறினார்.  டி.ராஜேந்தர் இயக்கிய முதல் படமான 'வசந்த அழைப்புகள்' படம் அப்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, 'ரயில் பயணங்கள்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். நானும் அவரை நேர்காணல் செய்யத் தயாரானேன். அவரை நேர்காணல் செய்வதற்கு முந்தைய நாள் அவர் இயக்கிய முதல்படமான 'வசந்த அழைப்புகள்' படத்தை திரையரங்கில் பார்த்தேன். படம் வெளியாகி அன்று 99ஆவது நாள். படம் எனக்குப் பிடிக்கவில்லை. 

 

writer sura

 

மறுநாள், நேர்காணல் செய்வதற்காக 'ரயில் பயணங்களில்' படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். ஸ்ரீநாத் கதாநாயகன், 'புதுக்கவிதை' ஜோதி கதாநாயகி எனப் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் டி.ராஜேந்தர். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மயிலை குருபாதம். படத்திற்கு ஃபைனான்ஸ் வழங்கியவர் கீதாலயா முருகேச கவுண்டர். படப்பிடிப்பு தளத்தில் முருகேச கவுண்டர் சேர் போட்டு அமர்ந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அதுபற்றி முருகேச கவுண்டரிடம் டி.ராஜேந்தர் விளக்குவார். அது பார்ப்பதற்கு எனக்கே ஆச்சரியமாக இருந்தது.  ஏனென்றால் ஒரு ஃபைனான்சியரிடம் படத்தின் கதை குறித்தும் எடுக்கப்படும் காட்சிகள் குறித்தும் விளக்க வேண்டிய அவசியமேயில்லை. இன்று டி.ராஜேந்தர் இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்துள்ளார் என்றால் அதற்கு அவருடைய ஆரம்பக்கால தன்னடக்கம்தான் காரணம்.

 

படப்பிடிப்பு தளத்தில் நேரங்கிடைத்தபோது எனக்குப் பேட்டியளித்தார். அப்போது, வசந்த அழைப்புகள் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக அவரிடம் கூறினேன். உடனே அவர், நீங்க படம் பார்க்கும்போது எத்தனையாவது நாள்... தியேட்டரில் எத்தனை பேர் படம் பார்த்தார்கள்... 'நீலச் சேலை பறக்கையிலே'னு ஒரு பாட்டு வருதே அதுக்கு தியேட்டர்ல டான்ஸ் ஆடுனாங்களா... என ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க நானும் பதில் கூறிக்கொண்டே வந்தேன். 99ஆவது நாள் படம் பார்த்துருக்கீங்க... பாதி தியேட்டருக்கு ஆட்கள் இருந்திருக்காங்க... பாட்டுக்கு எந்திருச்சு டான்ஸ் எல்லாம் ஆடியிருக்காங்க... இதெல்லாம் படம் நல்லா இல்லாமலா நடந்திருக்கும் என்றார்.

 

உங்களுக்கு பிடிக்கலைன்னா படம் நல்லா இல்லன்னு அர்த்தம் இல்ல சார் எனக் கூறிவிட்டு ஓர் உதாரணத்தையும் கூறினார். இட்லி சாப்பிடுறீங்கனா சாம்பார் ஊத்தி சாப்பிடச் சிலருக்கு பிடிக்கும்... சிலருக்கு சட்னி ஊத்தி சாப்பிடப் பிடிக்கும்... சிலருக்கு ரெண்டும் சேர்த்து ஊத்தி சாப்பிட பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை இருக்கும் சார் என்றார். உங்களுக்குப் படம் பிடிக்கல... ஆனால் மக்களுக்குப் படம் பிடிச்சிருக்கு எனச் சிரித்துக்கொண்டே கூறினார். அது உண்மைதான். மக்களுக்குப் பிடித்த விஷயங்களை வைத்து படம் எடுத்ததால்தான் அவர் இன்றைக்கு இவ்வளவு பெரிய இடத்தில் உள்ளார்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".