Skip to main content

60 வயதிலும் பெண்ணின் காலில் விழுந்த சிவாஜி... எழுத்தாளர் சுரா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

Sivaji Ganesan

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். ‘திரைக்குப் பின்னால்’ நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள். சிவாஜி கணேசனின் நன்றி, விஸ்வாசம் பற்றி நான் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இதைக் கேட்கும்போது சிவாஜி கணேசனின் மீது உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வரும். 

 

சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.

 

writer sura

 

அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி சார் 200 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

 

பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது  நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். 

 

அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள். இந்த சம்பவம் நம் அனைவருக்குமே ஒரு பாடம்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ, அன்றைக்குத் தான் என் மரணம்" - பாரதிராஜா

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

bharathiraja about muthal mariyaathai movie re release and sivaji

 

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் 'முதல் மரியாதை'. ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட 200 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் 33வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்காக பாரதிராஜாவும் சிறந்த பாடல் வரிகளுக்காக வைரமுத்துவும் விருது வாங்கினர். 

 

இந்த நிலையில் 38 ஆண்டுகள் கழித்து இப்படம் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் உள்ள 67 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு திரையரங்கிற்கு சென்ற பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. சினிமா என்பது பெரிய கலை மற்றும் பொக்கிஷம். நான் சிறு குழந்தையாக இருக்கும் போது அண்ணாந்து பார்த்து வியந்து எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதற்கும், தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக் கற்றுக் கொண்டதற்கும் காரணமானவர் ஒரே ஒரு மனிதன் நடிகர் சிவாஜி கணேசன் தான். சிவாஜி இல்லையென்றால் பாரதிராஜா இல்லை. இன்றளவும் என்னை நடிக்க அழைக்கிறார்கள் என்று சொன்னால் சிவாஜி போட்ட பிச்சை. 

 

இப்படத்திற்கு முதல் மரியாதை என தலைப்பு வைக்கப்பட்டது என பலருக்கு சந்தேகம். என் வாழ்க்கையில் சரஸ்வதி, லட்சுமி, முருகன் என யார் யாரையோ கும்பிட்டுள்ளேன். எங்க அப்பா, அம்மாவுக்கும் மரியாதை கொடுத்துள்ளேன். ஆனால் திரையுலகில் நுழைந்து என்னை வாழ வைத்த தெய்வம் சிவாஜி அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அதை செய்தேன். 50 ஆண்டுகள் கழித்தும் இன்றும் பசுமையாக இருக்கிறது முதல் மரியாதை.

 

இன்றைக்கும் என் முன்னால் நிறைய மைக்குகள் இருக்கின்றன. என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ அன்றைக்கு தான் என் மரணம். உங்கள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். வாழ்வேன். இன்னும் நீண்ட காலம் வாழ்வேன்" என்றார்.    

 

 

Next Story

"பராசக்தி படத்தைப் பார்த்தபோது அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது" - வெற்றிமாறன்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

vetrimaaran speech at 70 Years of Parasakthi function

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் சிவாஜி நடிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், 1952 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பராசக்தி'. இப்படம் வெளியாகி 70 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் சிறப்பு திரையிடலோடு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

 

நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், "நம்ம தமிழ் சினிமா சூழலில் அல்லது தமிழ்நாட்டுச் சூழலில் சமூகம் சார்ந்த திரைப்படங்களை எடுக்க நினைப்பவர்கள், அவர்களுக்கு சிறந்த 5 படங்கள் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது எனும் சொல்லும் பட்சத்தில், அதில் பராசக்தி கண்டிப்பா ஒரு படமாக இருக்கும். இப்படத்தைப் பார்த்தபோது அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி மக்களுக்குப் பெரிய பலனைக் கொடுக்காது என்ற அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது.

 

எல்லா நிலைகளிலும் எளிய மனிதர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகச் சூழலில் பார்த்தால் சாதிய அடிமைத்தனம், குடும்பச் சூழலில் பார்த்தால் பெண் அடிமைத்தனம் எனப் பல நிகழ்வுகளை சொல்லலாம். அவை அனைத்தும் இப்படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதற்கான தொடக்க சினிமாவாக இப்படம் இருந்தது. அப்படி ஒரு முக்கியமான படம் பராசக்தி. 

 

இன்றளவும் இப்படம் பொருந்திப் போகுது. அதே சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவை அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நிறைய விஷயங்கள் இருக்கு. இப்படம் இன்னும் 30 வருடம் 50 வருடம் கழித்தும் தொடர்புடையதாக இருக்கும். இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு. 70 வருடம் கழித்து அதைக் கொண்டாட வேண்டிய இடத்தில் இருக்கோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.