Skip to main content

‘தேவர் மகன்’... மறுத்த சிவாஜி; மனதை மாற்றிய கமல்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

Kamal Haasan

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்துவருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"வாழ்க்கையில் திட்டமிடல் என்பது மிக முக்கியம். ஒரு காரியத்தைச் செய்யும்முன் ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசித்து செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றிபெறுவோம் என்பது உண்மை. ‘தேவர் மகன்’ திரைப்படத்தின்போது கமல்ஹாசன் எவ்வாறு திட்டமிட்டுச் செயல்பட்டார் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். 

 

‘தேவர் மகன்’ திரைப்படம் கமல்ஹாசன் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். பரதன் அந்த திரைப்படத்தை எவ்வளவு அருமையாக இயக்கியிருந்தார் என்பது நமக்குத் தெரியும். ‘தேவர் மகன்’ எனப் பெயரில் உள்ளது போலவே தேவர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கிராமத்துக் கதையைக் கமல் உருவாக்கினார். மண் சார்ந்த கதையாக இருப்பதால் உதவிக்காக சங்கிலி முருகனை கமல் உடன்வைத்துக்கொண்டார். மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாக இது மாதிரியான மண் சார்ந்த கதைகளை எடுத்த அனுபவம் சங்கிலி முருகனுக்கு அதிகம். ‘தேவர் மகன்’ திரைப்படம் மண் வாசனை மாறாமல் இருந்ததற்கு சங்கிலி முருகனும் ஒரு காரணம். 

 

நடிகர் கமல், இந்தத் திரைப்படத்தில் செய்த மிக புத்திசாலித்தனமான செயல் என்றால், அது சிவாஜி கணேசனை தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததுதான். இதற்காக கமல், சிவாஜி கணேசனை அணுகியபோது சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, உடலில் ஃபேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தியிருந்தார். ‘தேவர் மகன்’ படத்தில் நடிக்க கமல் அணுகியதும் தன்னுடைய உடல்நிலையைக் காரணங்காட்டி சிவாஜி மறுத்துவிடுகிறார். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருந்தார். நீங்கள்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பீர்கள் என சிவாஜியிடம் எடுத்துக்கூறிய கமல், அமெரிக்காவில் எடுத்துவரும் சிகிச்சை முடியும்வரை தான் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதே போல, சிவாஜி கணேசன் சிகிச்சையை முடித்து திரும்பிய பிறகே ‘தேவர் மகன்’ திரைப்படம் தொடங்கப்பட்டது. கமல் ஏன் அவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதற்கு ‘தேவர் மகன்’ படத்தைப் பார்க்கும்போது நமக்கும் தெரியும்.

 

வெளிநாட்டில் படித்துவிட்டு கமல் சொந்த கிராமத்திற்கு வருவார். சிவாஜி சார் கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருப்பார். கமலை சிவாஜி உட்காரச் சொல்லுவார். கமல் உட்கார மறுத்துவிடுவார். பொதுவாக கிராமப்புறங்களில் மதிப்பு, மரியாதை காரணமாக பெரியவர்கள் முன் சிறியவர்கள் உட்காரமாட்டார்கள். நீங்கள் யோசித்துப்பாருங்கள்... அந்த இடத்தில் சிவாஜி கணேசனுக்கு பதிலாக வேறொரு நடிகர் இருந்து கமல் இவ்வாறு உட்கார மறுத்திருந்தால் ரசிகர்களே அதை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். அந்த இடத்தில் சிவாஜி கணேசன் இருந்ததால்தான் அந்தக் காட்சி பொருத்தமாகவும் மண் வாசனையுடனும் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைத்தது. ‘தேவர் மகன்’ திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதற்கு காரணம் சிவாஜி கணேசனின் நடிப்பும், அந்தக் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன்தான் நடிக்க வேண்டுமென கமல் தீர்மானமாக எடுத்த முடிவும்தான்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“உடையாத உடல்; சரியாத மனம்” - கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 vairamuthu congratulates Kamal Haasan

 

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளிலும் வல்லவர் நடிகர் கமல்ஹாசன். திரைத்துறையையும் தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினைத் தொடங்கி அரசியல் செயல்பாடுகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி திரைப் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

அவரது எக்ஸ் பக்கத்தில் "நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன். இத்துணை நீண்ட திரைவாழ்வு அத்துணை பேர்க்கும் வாய்க்காது. வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர். எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்?  உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும். வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்