Skip to main content

மகேந்திரன் கூறியதைக் கேட்டு மனமுடைந்த எம்.ஜி.ஆர்... எழுத்தாளர் சுரா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

mgr

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

" 'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' ஆகிய படங்களை எடுத்த இயக்குநர் மகேந்திரன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கல்லூரியின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் வருகைதந்துள்ளார். அது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக எம்.ஜி.ஆர் இருந்த காலகட்டம். எம்.ஜி.ஆர் பேசுவதற்கு முன் மாணவர்கள் சிலர் மேடையில் பேசுகின்றனர். அவர்களுள் ஒருவராக மகேந்திரனும் பேசுகிறார். மகேந்திரன் பேசும்போது மரங்களைச் சுற்றி காதல் டூயட் பாடுவது, புல்வெளிகளில் ஓடி காதல் டூயட் பாடுவது ஆகியவற்றை விமர்சித்து, தமிழ் சினிமா செயற்கையாக உள்ளது எனக் கூறியுள்ளார். மகேந்திரன் பேசிவிட்டு மேடையிறங்கிவிடுகிறார். சற்று நேரம் கழித்து கல்லூரி முதல்வரிடம் சொல்லி மகேந்திரனை கூப்பிடச் சொல்கிறார் எம்.ஜி.ஆர். மகேந்திரன் வந்து எம்.ஜி.ஆரைச் சந்திக்கிறார்.

 

உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. நீங்கள் எதிர்காலத்தில் அருமையான பேச்சாளராகவும் அருமையான மனிதராகவும் முன்னுக்கு வருவீர்கள் என்று தன் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டு மகேந்திரனிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். யோசித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் படத்திலும் இது போன்ற காட்சிகள் இருக்கும். இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் அன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர். ஒரு கல்லூரி மாணவன், படங்களில் வருவதை விமர்சித்து செயற்கையாக உள்ளது என்று சொல்வதா என்று நினைத்துக் கோபப்பட்டிருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் அதைக் கையாண்டது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

 

writer sura

 

பின், மகேந்திரன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு பத்திரிகையில் நிருபராக வேலைக்குச் சேர்கிறார். தற்போது உள்ளதுபோல இவ்வளவு பத்திரிகையெல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது; விரல்விட்டு எண்ணிவிடலாம். எம்.ஜி.ஆர் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அப்படம் குறித்து அறிவதற்காக பத்திரிகையாளர்கள் அவரைச் சந்திக்கச் செல்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், மகேந்திரனைப் பார்த்ததும் அடையாளம் கண்டுவிட்டார். நீங்கள் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்தானே... இங்கு என்ன செய்துகொண்டிருக்கீங்க எனக் கேட்டுள்ளார். பத்திரிகையில் நிருபராக வேலை செய்யும் விஷயத்தைக் கூறியவுடன் எந்தப் பத்திரிகை என்று எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். மகேந்திரன் தான் வேலை பார்க்கும் பெரிய அளவில் பிரபலமில்லாத அந்தப் பத்திரிகையின் பெயரைச் சொல்லியுள்ளார். உடனே எம்.ஜி.ஆர், உங்கள் திறமைக்கு ஏற்ற பத்திரிகை அது இல்லையே... வேறு ஏதாவது பத்திரிகையில் முயற்சி பண்ணி பார்ப்போம் எனக் கூறியுள்ளார்.

 

பின்னர், மகேந்திரன் வேறு ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்கிறார். நாட்கள் செல்கின்றன... வேறொரு படப்பிடிப்பு தளத்தில் எம்.ஜி.ஆரும் மகேந்திரனும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. அப்போது 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நான் நடிக்கும்படி திரைக்கதை, வசனம் எழுத முடியுமா என மகேந்திரனிடம் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். மகேந்திரனும் சம்மதம் தெரிவித்தார். இப்போது லாயிட்ஸ் ரோட்டில் தலைமைக் கழகம் உள்ளதே, அது எம்.ஜி.ஆரின் சொந்த வீடு. அங்குதான் அவருடைய பட நிறுவனமும் இருந்தது. அங்கு மாடியில் திரைக்கதை எழுத மகேந்திரனுக்கு ஓர் அறை ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. அவரும் அங்கு இருந்தே திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பிக்கிறார். நாட்கள் செல்லச்செல்ல மகேந்திரனிடம் சாப்பிடக் காசு இல்லை. அங்கே எதிரே உள்ள ஒரு மெஸ்ஸில் அவருடைய நண்பருக்கு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கை வைத்து இவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார். 

 

திரைக்கதை எழுதி முடித்தபின், பேப்பரில் எழுதிவைத்துள்ள மொத்த திரைக்கதையையும் எடுத்துக்கொண்டு ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருந்த எம்.ஜி.ஆரைச் சந்திக்க மகேந்திரன் சைக்கிளில் செல்கிறார். எம்.ஜி.ஆரிடம் போய் திரைக்கதை எழுதி முடித்துவிட்டதைச் சொல்லியிருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், வீட்டிலிருந்து மாதந்தோறும் பணம் அனுப்பிவிடுகிறார்களா என எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். முதலில் மகேந்திரனுக்கு என்ன பணம் குறித்து கேட்கிறார் என ஒன்றும் புரியவில்லை. பின், தங்கள் குடும்பம் நடுத்தரமான குடும்பம் என்றும் தன்னுடைய வீட்டில் இருந்து தனக்கு எந்தப் பணமும் அனுப்பமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

மகேந்திரன் காரைக்குடி பக்கம் என்றதும் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என எம்.ஜி.ஆர். நினைத்துள்ளார். மகேந்திரன் தன் நிலையை விளக்கிச் சொன்னதும், சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள் என எம்.ஜி.ஆர். கேட்டுள்ளார். தன்னுடைய நண்பரின் உதவியால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என மகேந்திரன் கூற, எம்.ஜி.ஆர் மனமுடைந்துவிட்டாராம். அடடா எனச் சொல்லி தலையில் எம்.ஜி.ஆர் கைவைத்ததாக மகேந்திரன் என்னிடம் சொன்னார். திரைக்கதை எழுத வேண்டும் என ஒரு வேலை கொடுத்துள்ளோம். முதலிலேயே அதற்கான பணம் குறித்து நாம் பேசியிருக்க வேண்டுமே... இப்படித் தவறு செய்துவிட்டோமே என நினைத்து எம்.ஜி.ஆர் மிகவும் வருத்தப்பட்டாராம். 

 

இப்ப எதுல வந்திங்க என எம்.ஜி.ஆர் கேட்க, சைக்கிளில் வந்த விஷயத்தை மகேந்திரன் கூறியுள்ளார். நீங்கள் நேராக எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் போங்க... வேற எங்கயும் போயிராதிங்க... அங்கேயே இருங்கள் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். உடனே மகேந்திரன் சைக்கிளில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகம் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒர் உதவியாளர் கணிசமான தொகையை மகேந்திரனிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாகக் கூறியுள்ளார். இந்த விஷயங்களை மகேந்திரன் என்னிடம் கூறும்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை, எம்.ஜி.ஆர் என்ற அந்த நல்ல மனிதரின் இரக்கக் குணம், பண்பட்ட இதயம் குறித்து அறிந்து என் கண்களும் லேசாகக் கலங்கின."

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.