Skip to main content

'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் சத்யராஜ் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

திரையுலகில் நடிகர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்றால் அது ஒரே நாளில் நடந்ததல்ல. பல தடைகள் மற்றும் தோல்விகளைத் தாண்டி, வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து நெடிய போராட்டத்திற்குப் பிறகே இந்த இடத்தை அவர்கள் அடைந்துள்ளனர். அடிமட்டத்தில் இருந்து தன்னுடைய உழைப்பால் படிப்படியாக மேலே உயர்ந்தவர்களில் நடிகர் சத்யராஜ் முக்கியமானவர். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், பிரபு, சத்யராஜ் ஆகியோர் அடுத்தக்கட்ட கதாநாயகர்களாக இருந்தனர். சத்யராஜ், நடிகர் சிவகுமாரின் நெருங்கிய உறவினர். ஆரம்பக் காலகட்டத்தில் அவருடைய அரவணைப்பு மற்றும் உதவியால் சில படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் சத்யராஜ் என்ற பெயர் பரவலாக வெளியே தெரியாது. சினிமா சார்ந்த விஷயத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக சில படங்களில் ப்ரொடக்ஷன் உதவி, மணிவண்ணன் படங்களில் கதை விவாதம், தயாரிப்பு நிர்வாக உதவி என சினிமா சார்ந்த பல்வேறு வேலைகள் செய்தார். பின், வில்லனாக  பிரபலமாகி கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.   

 

சத்யராஜ் அவர்களுக்கும் எனக்கும் இடையேயான முதல் சந்திப்பு வாகினி ஸ்டூடியோவில்தான் நடந்தது. ஒரு காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவாக அந்த ஸ்டூடியோ இருந்தது. அங்கு, சிவகுமார் நடிப்பில் உருவான ‘வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்தப் படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில் நானும் சிவகுமாரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நடிகர் சிவகுமாரை பார்ப்பதற்காக சத்யராஜ் பைக்கில் வந்தார். சத்யராஜை கைகாட்டி “சுரா உங்களுக்கு இவரைத் தெரியுமா?” என்று சிவகுமார் என்னிடம் கேட்டார். அந்தச் சமயத்தில் வெளியாகியிருந்த ‘அவசரக்காரி’, ‘குருவிக்கூடு’ ஆகிய படங்களில் வில்லனாக சத்யராஜ் நடித்திருந்தார். இவ்விரு படங்களையும் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியில் நான் பார்த்திருந்தேன். “அவரை எனக்குத் தெரியும்” என்றேன். உடனே, “இவர் யாருன்னு தெரியுமா?” என என்னைக் கைகாட்டி சத்யராஜிடம் கேட்டார். சத்யராஜ் தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். “இந்த வாரம் ஆனந்த விகடனில் இவரைப் பற்றி வந்திருக்கிறது. வாங்கிப் படி” என சிவகுமார் கூறினார். அப்படியே பேசிக்கொண்டிருக்கையில், “இப்ப என்ன படம் பண்ணிக்கிட்டிருக்கீங்க” என சத்யராஜிடம் கேட்டேன். ‘நூறாவது நாள்’ என்றொரு படம் பண்ணிக்கொண்டிருப்பதாக சத்யராஜ் கூறினார். மேலும், அந்தப் படம் ரிலீசாகும் கட்டத்தில் இருப்பதாகவும் அந்தப் படம் தன்னுடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறினார். அவர் சொல்லி ஒரு மாதத்திற்குள்ளாகவே ‘நூறாவது நாள்’ திரைப்படம் வெளியாகிவிட்டது. 

 

மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் நாயகனாக நடித்த அந்தப் படத்தில் வில்லனாக சத்யராஜ் நடித்திருந்தார். படம் நூறு நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. படத்தில் சத்யராஜ் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ஆங்கில க்ரைம் படங்களுக்கு இணையான படமாக ‘நூறாவது நாள்’ படம் இருந்தது. அதில், சத்யராஜ் நடித்திருந்த கதாபாத்திரம் சத்யராஜுக்காகவே மணிவண்ணன் உருவாக்கியதுபோல இருந்தது. அதுவரை சினிமா வட்டாரத்திற்குள் மட்டும் அறியப்பட்டுவந்த சத்யராஜ் என்ற பெயர், தமிழ்நாடெங்கும் சென்று சேர்ந்தது. மறுவார ஆனந்த விகடனில் சத்யராஜ் புகைப்படம்தான் அட்டைப்படம். நான்கு பக்க அளவிற்கு சத்யராஜ் குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் அட்டைப்படமும் கவர் ஸ்டோரியும் வந்தால் பெரிய விஷயம். அட்டைப்படத்தில் இடம்பெறும் அளவிற்கு சத்யராஜ் நடிப்பு அந்தப் படத்தில் இருந்தது. 

 

இது தொடர்பாக அளித்த பேட்டியில் அவர் கூறிய ஒரு பதில் மிகவும் அற்புதமாக இருந்தது. “இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கீங்க... மக்கள் உங்கள் நடிப்பை ரொம்ப பாராட்டியிருக்காங்க... அதுபற்றி கூறுங்கள்” என நிருபர் கேட்டதற்கு, "மாடியிலிருந்து கீழே ஓடிவரும்படி இயக்குநர் மணிவண்ணன் கூறினார். படத்தில் எனக்கு வழுக்கைத் தலை. ஓடிவரும்போது தலையைக் கையால் தடவுங்கள் என்றார். அதை நான் செய்தேன். அந்தக் காட்சியில் எனக்கு வசனமே கிடையாது. ஒரு வார்த்தைகூட நான் பேசியிருக்க மாட்டேன். ஆனால், அந்தக் காட்சிக்கு மக்கள் கைதட்டினார்கள். என்னுடைய திறமைக்காக அவர்கள் கைதட்டினார்கள் என்பதைவிட என்னுடைய நல்ல நேரம் அந்த இடத்தில் தொடங்கிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்" என்றார்.

 

இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஓடிவிட்டன. 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஐயர் ஐபிஎஸ்’ என்ற படத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்தார். நான் அந்தப் படத்திற்கு மக்கள் தொடர்பு அதிகாரி. பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்தபோது ஓய்வு நேரத்தில் சத்யராஜுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், முதன்முதலில் சத்யராஜை சந்தித்தது குறித்தும் ‘நூறாவது நாள்’ திரைப்படம் தன்னுடைய கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவர் கூறியது குறித்தான பழைய நினைவுகளை அவரிடம் நினைவுகூர்ந்தேன். அதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த சத்யராஜ் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இன்றைக்கு கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் அறியப்படும் நடிகராக சத்யராஜ் மாறிவிட்டார். இன்றைக்கும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் சத்யராஜை பார்க்கும்போது, அவரது வளர்ச்சியை ஆரம்பக்கட்டத்தில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".