Skip to main content

30 வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து... இன்றுவரை படுத்த படுக்கையாக இருக்கும் நடிகர்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் என்னுயிர் தோழன் பாபுவிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து அவரது வாழ்க்கையையே முடக்கியது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு நடிகருக்கு அவரது உடல்தான் மூலதனம். அந்த உடலை வைத்துதான் அவரது வாழ்க்கையே உள்ளது. நடனம், சண்டைக்காட்சி, சாதாரணக் காட்சி என எந்தக் காட்சியாக இருந்தாலும் மிகவும் கவனமாக நடிக்கவேண்டும். படப்பிடிப்பில் ஒரு நடிகருக்கு காயம் ஏற்பட்டால் அந்தப் படம் மட்டுமின்றி அடுத்தடுத்து அவர் கால்ஷீட் கொடுத்துள்ள படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்படும். அதனால் ஏற்படுகிற பணச்செலவு, நேர விரயம் என்பது கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கும். ஒரு நடிகர் கவனமாக இல்லாவிட்டால் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு 'என்னுயிர் தோழன் பாபு' வாழ்க்கை உதாரணம். 

 

பாரதிராஜா இயக்கிய என்னுயிர் தோழன் படத்தின் மூலமாக திரைக்கு அறிமுகமானவர் பாபு. சென்னை தமிழை இவ்வளவு அழகாக பேசி, சேரி பையனை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறானே... யார் இந்த பாபு என்று படம் வெளியானபோது அனைவரும் பேசினர். தன்னுடைய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பாபுவின் நடை, முக பாவனைகளைக் கண்டு அவரை ஹீரோவாக்கினார் பாரதிராஜா. என்னுயிர் தோழன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பாபுவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. என்னுயிர் தோழன் படம் வெளியான பிறகு மிகவும் பிஸியான நடிகராகிவிட்டார் பாபு. 

 

எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருந்த நிலையில், 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தில் நடிக்க பாபுவிற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்தில் பாபுவிற்கு ஜோடியாக சிவரஞ்சனி நடித்தார். சிவரஞ்சனிக்கு இந்தப்படம்தான் அறிமுகப்படம். பார்த்தீப ராமன் இயக்க, எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்க, நான் அந்தப்படத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினேன். இலங்கைத்தமிழர் ஒருவரும் விநியோகஸ்தர் ஒருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்தனர். ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்ய படக்குழு திட்டமிட்டிருந்தனர்.

 

50 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கையில், இரவுநேர சண்டைக்காட்சி படமாக்கலின்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடந்துவிடுகிறது. உயரமான இடத்திலிருந்து கதாநாயகன் கீழே குதிப்பது போன்று ஒரு காட்சி. வழக்கமாக இது மாதிரியான ஆபத்துகள் நிறைந்த சண்டைக்காட்சியில் சண்டை கலைஞர்கள்தான் டூப் போட்டு நடிப்பார்கள். அன்றைக்கும், ஒருவர் டூப் போட்டு குதிக்க தயார் நிலையில் இருந்தார். ஆனால், அந்தக் காட்சியில் நானே நடிக்கிறேன் என பாபு கூறினார். இயக்குநர் எவ்வளவோ கூறியும் நான்தான் நடிப்பேன் என பாபு உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி இயக்குநரும் அனுமதித்தார். ஷாட் ஓகே என்று சொன்னதும் பாபு மேலே இருந்து கீழே குதிக்க, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருக்கு முதுகெலும்பு உடைந்துவிட்டது. பாபுவின் ஆர்வக்கோளாறினால் ஏற்பட்ட விளைவு இது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பாபுவை சென்னை அழைத்துவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். தயாரிப்பாளரின் செலவிலேயே மாதக்கணக்கில் சிகிச்சை நடந்தது. இருப்பினும், கடைசிவரை உடைந்த முதுகெலும்பை சரிசெய்ய முடியவில்லை. ஏதாவது காயம் ஏற்பட்டால் சரிசெய்திருக்கலாம். முதுகெலும்பே உடைந்துவிட்டதால் ஒன்றும் செய்யமுடியாது என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருந்த பாபு, ஒருகட்டத்தில் படுத்த படுக்கையாகிவிட்டார். பல மாதங்கள் அந்தப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாமலேயே இருந்தது. 

 

இனி பாபுவை வைத்து இந்தப்படத்தை தொடரவே முடியாது என்ற நிலை வந்தவுடன், கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்தப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்கள். ஏற்கனவே எடுத்த 50 சதவிகித படப்பிடிப்பில் பாபு சம்மந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருந்தனர். அதையெல்லாம் தற்போது மீண்டும் ஷூட் செய்தனர். கவித்துவம் கொண்ட நல்ல காதல் கதையாக 'மனசார வாழ்த்துங்களேன்' திரைப்படம் இருந்தபோதிலும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அன்று படுத்த படுக்கையான பாபுவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. பாபுவின் ஆர்வக்கோளாறு காரணமாக அவரது வாழ்க்கையே போய்விட்டது. இருமுறை அந்தப்படத்தை ஷூட் செய்ததால் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் செலவு ஏற்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில் பட வசூல் இல்லாததால் மிகப்பெரிய நஷ்டத்தை அந்தத் தயாரிப்பாளர் சந்தித்தார். அதன் பிறகு, அவர் படம் தயாரிக்கவேயில்லை. அந்தப்படத்தை இயக்கிய இயக்குநருக்கும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".