தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘அசுரன்’. தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து நாவல்களைப் படமாக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த வெற்றிமாறன், தற்போது சிறுகதை ஒன்றைப் படமாக்கும் முயற்சியில் உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து, காமெடி நடிகர் சூரி நடிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த இயக்குனர் பாரதிராஜா, இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அக்கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், புதிய திருப்பமாக பாரதிராஜா கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்திலேயே நடிக்க இருந்தார். பிற படங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி பின்னர் விலகியது குறிப்பிடத்தக்கது.