Skip to main content

"மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது" - விஜய் சேதுபதி

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

vijay sethupathi and soori about chennai theatre untouchability issue

 

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் நேற்று (30.03.2023) திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தைக் காண சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்து பார்க்க சென்ற போது, அவர்களை பார்த்த திரையரங்க ஊழியர் சாலையோரம் பாசிமணி விற்பவர்கள் என்பதை அறிந்து உள்ளே செல்ல விடாமல் மறுத்தார்.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டனங்கள் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம், "இப்படம் யு/ஏ சான்றிதழுடன் வெளியாவதால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. அதனால் தான் 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினரை எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் உள்ளே செல்ல மறுத்துள்ளனர்" என விளக்கம் கொடுத்திருந்தனர். மேலும், பின்பு அவர்களை அனுமதித்ததாகக் குறிப்பிட்டு அவர்கள் படம் பார்க்கும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள். 

 

இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாற கோயம்பேடு காவல் ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். மேலும், அமைந்தகரை வட்டாட்சியரும் திரையரங்குக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு அந்த பெண்மணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளே விட மறுத்த திரையரங்க பணியாளர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   

 

இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பிரியா பவானி ஷங்கர், கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர். சூரி பேசுகையில், "எல்லோரும் சமம். எல்லோரும் ஒன்றுதான். அதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் திரையரங்கு உருவானது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கக் கூடாது. எந்தச் சூழலில் நடந்திருக்கின்றது என்று தெரியவில்லை. இருப்பினும் அதற்காக நான் வருந்துகிறேன்" என்றார். 

 

விஜய் சேதுபதி, "எப்பவும் எங்கேயும் எந்தவொரு மனிதனும் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது என்ன காரணமாக இருந்தாலும் சரி. எங்க நடந்தாலும் சரி. இந்த பூமி மனிதர்கள் ஒன்றாக வாழப் படைக்கப்பட்டது. அதில் எந்த வகையிலும் வேற்றுமை நடந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” - வைரமுத்து உருக்கம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vairamuthu about udhayam theatre yet to be closed

சென்னையில் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற திரையரங்கமாக இருந்து வருகிறது உதயம் திரையரங்கம். அசோக் நகரில் உள்ள இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு ஸ்கிரீன்கள் அமைந்திருக்கிறது. நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அங்கு குறைந்தே காணப்பட்டது. மேலும் கொரோனோவிற்கு பிறகு திரையரங்கிற்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்கை மூடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. 

ad

சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.  இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது திரையரங்க ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் உதயம் திரையரங்கம் மூடப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது. முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரை வளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன. மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது. இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும். நன்றி உதயம்” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சென்னையில் மூடப்படும் பிரபல திரையரங்கம்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Popular udhayam cinemas theater to close in Chennai

சென்னையில் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற திரையரங்கமாக இருந்து வருகிறது உதயம் திரையரங்கம். அசோக் நகரில் உள்ள இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு ஸ்கிரீன்கள் அமைந்திருந்தன. நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அங்கு குறைந்தே காணப்பட்டது. 

இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது திரையரங்க ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இதேபோல் சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. அதைத் தொடர்ந்து தற்போது உதயம் திரையரங்க கட்டடமும் இடிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.