இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'குஷி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இவர் தற்போது இந்தியில் 'நிகம்மா' படத்தை தொடர்ந்து 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ரோஹித் ஷெட்டி மற்றும் சுஷ்வந்த் பிரகாஷ் இயக்கிவரும் இந்த சீரிஸில் சித்தார்த் மல்ஹோத்ரா, விவேக் ஒபேராய், ஈஷா தல்வார் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர். இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' வெப் சீரிஸின் படப்பிடிப்பின் போது ஷில்பா ஷெட்டிக்கு காலில் அடிபட்டுள்ளது. பின்பு சிகிச்சை பெற்று காலில் கட்டுப்போட்டு வீல் சேரில் அமர்ந்த படி ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி. இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள பதிவில், "ரோல், கேமரா, ஆக்ஷன்... காலை உடையுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் உண்மையிலே உடைத்துக்கொண்டேன். இன்னும் ஆறு வாரங்களுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. விரைவில் வலிமையாகவும் சிறப்பாகவும் வருவேன். அதுவரை பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனை எப்போதும் பலனளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.