அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கி திரைப்படம், வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், திரைபிரபலங்களுக்கான சிறப்பு திரையிடல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், "ராக்கி திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான முயற்சி. அருண் மாதேஸ்வரனின் திரைமொழி வித்தியாசமாக இருக்கும். சர்வதேச தரத்திலான படம் என்பதால்தான் படத்தை உரிமையை வாங்க முடிவெடுத்தோம். இந்தப் படம் ரசிகர்களைச் சென்றடையும் என்று நம்புகிறோம். வித்தியாசமான படம் பார்க்க விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். 120 திரையரங்கில் படத்தை வெளியிட முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். நயன்தாரா படத்தை பார்த்துவிட்டு வாங்குங்க என்று சொன்னார். பொங்கல் சமயத்தில் படம் ஓடிடியில் வெளியாகும் என்று நினைக்கிறேன். சில ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால் ஓடிடியில் வெளியாகும் தேதியை இன்னும் உறுதிசெய்யவில்லை.
படப்பிடிப்பிற்கு தினமும் மூன்று வாளி ரத்தம் தேவைப்பட்டது. அழுகை காட்சிகள் நிறைந்த படத்தில் க்ளிசரின் செலவு அதிகமாக இருக்கும். அதேபோல இந்தப் படத்தில் ரத்தத்திற்குத்தான் அதிகம் செலவானது. இன்னும் 5 வருடங்களுக்கு பிறகு பார்த்தால்கூட இந்தப் படம் தனித்துவமான படமாக இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மிகப்பெரிய இயக்குநராக இருப்பார்" எனக் கூறினார்.