Skip to main content

பாதியில் நிறுத்தப்பட்ட விடுதலை படம்; போலீசாருடன் தாய்மார்கள் வாக்குவாதம்

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

viduthalai theatre issue

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் நேற்று (31.03.2023) திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 'ஏ' சான்றிதழுடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் தங்களத்து கருத்தை வெளிப்படுத்தி படக்குழுவினரை பாராட்டியிருந்தனர். 

 

இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் விடுதலை படம் ஓடிக்கொண்டிருந்த போது இடையில் நிறுத்தப்பட்ட சம்பவம் சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது. திரையரங்கில் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கையில் திடீரென உள்ளே வந்த போலீசார், இப்படம் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய படம் அல்ல என அங்கு சிறுவர்களுடன் வந்திருந்த குடும்பத்தினருடன் கூறினர். மேலும், அவர்களை வெளியே அழைத்துச் செல்லுமாறு சொல்லியுள்ளனர். 

 

இதனால் அங்கிருந்த தாய்மார்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஒரு பெண்மணி, மக்களுடைய வலியைப் பேசக்கூடிய ஒரு படத்தை குடும்பத்தோடு பார்க்கக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், “பெத்தவங்களுக்கு தெரியாதா சார்... எங்க வீட்டு குழந்தைகளுக்கு என்ன காட்டணும்னு... அரைகுறை ஆடையுடன் வரும் படங்களை குழந்தைகளுக்கு காட்டலாம். ஆனால், இந்தப் படத்தை காட்டக்கூடாதா... இதனால் நீங்க இது போன்ற படத்தை குடும்பத்துடன் பார்க்கக்கூடாதா. பார்த்து தெரிஞ்சுக்கக் கூடாதா” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

 

அதோடு அங்கிருந்தவர்கள் வன்முறை காட்சிகளுக்காக மட்டுமே ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது என்றும் ஆபாசக் காட்சிகள் இப்படத்தில் இல்லை என்றும் போலீசாருடன் வாதிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த பலரும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுவர், சிறுமிகளை குடும்பத்துடன் படம் பார்க்க அனுமதித்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

 

நேற்றைய முன்தினம் சிம்புவின் பத்து தல படம் வெளியான போது சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் சில பெண்கள் மற்றும் அவர்களுடன் வந்த குடும்பத்தாரை டிக்கெட் இருந்தும் உள்ளே விட அனுமதி மறுப்பு தெரிவித்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த சம்பவமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.