Skip to main content

“வள்ளுவருக்கு காவி உடை, ராஜராஜ சோழனுக்கு இந்து பட்டம்” - வெற்றிமாறன் விமர்சனம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

vetrimaaran talk about rajaraja cholan and vallurvar

 

தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஒருங்கிணைத்த விசிக தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியின் தலைவருமான ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலை விழாவில் பங்கேற்ற ஆவண மற்றும் குறும்படங்களின் இயக்குனர்களுக்கு சான்றிதழை வழங்கினார். 

 

அதனை பிறகு இவ்விழாவில் பேசிய வெற்றிமாறன், “திருமாவளவன் மிகவும் எளிமையான மனிதர். அசுரன் படத்தை எடுப்பதற்கு முன்பு, திருமாவளவனை நேரில் சந்தித்து, இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு, 'தனி மனிதனால் ஒரு சமூகத்திற்கு தீர்வு வருகிறது மாதிரி படத்தை எடுக்காதீர்கள். தொடர்ந்து சினிமாவில் நீங்கள் அதே தவறை தான் செய்கிறீர்கள். அதை மாற்றி ஒரு அமைப்பால் தீர்வு கிடைப்பது போல் பண்ணுங்க' என்றார். ஆனால் அசுரன் படம் வெளியானபோது அதே குற்றச்சாட்டை வைத்தார். சில விஷயங்கள் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது.

 

கலை என்பது அரசியல். இலக்கியம், சினிமா எல்லாமே அவர்கள் கையில்தான்  இருந்தது. அதனை திராவிட இயக்கம் அவர்களின் கையில் இருந்து எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு ஒரு மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற சக்திகளை எதிர்க்கும் பக்குவத்துடன் இருக்கிறது என நினைக்கிறேன். சினிமா வெகுமக்களை மிக எளிதில் சென்றடையக்கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் வடிவமாக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்த பிறகு கலை  கலைக்காகத்தான், இது மக்களுக்கானது அல்ல என்று நிறைய பேசினார்கள். மக்களுக்காகத்தான் கலை, மக்களை சரியாக பிரதிபலிப்பதுதான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் இன்றைக்கு சரியாக கையாள வேண்டும். அப்படி கையாள தவறிவிட்டால், எப்படி வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்களோ, ராஜராஜ சோழனை  இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படுகிறதோ அதே போன்று சினிமாவில் ஒரு நாள் நிச்சயம் நடக்கும். நம்முடைய அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும். என்னால் முடிந்த வரை பங்களிப்பை கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.