Skip to main content

‘வலிமை’ அப்டேட் கொடுத்த போனி கபூர்... கடுப்பான அஜித் ரசிகர்கள்!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

valimai

 

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்த ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டும்  எஞ்சியுள்ள நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு அதை இந்தியாவிலேயே படமாக்கும் யோசனையில் படக்குழு உள்ளது. இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது மே 1ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில், கரோனா பரவலால் இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடிநிலை காரணமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவோம் என அறிவித்திருந்தோம்.

 

அந்த அறிவிப்பை வெளியிடும்போது, கரோனா நோயின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் சுனாமி போல தாக்கும் என்று நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதார ரீதியாகவும் தங்களுடைய உறவுகளின் இழப்பு காரணமாக உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை மற்றுமொரு தேதிக்கு மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மே 1ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், சில ரசிகர்கள் மே 1ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை வெறும் ட்வீட்டில் தெரிவித்துவிட்டு, தற்போது அப்டேட் இல்லை என்பதை மட்டும் அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கிறீர்களே என போனி கபூரை கிண்டலும் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

“உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன்” - போனி கபூர் உறுதி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
boney kapoor about sri devi biopic

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீ தேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது.  

இந்த சூழலில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த போனி கபூர், “அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும். அதனால் அவரது பையோ பிக் உருவாகாது. நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்றுள்ளார்.