![vairamuthu write aal songs in bala vanangaan movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/jyvXaw894uHY4jwZPHvP1imWXYgxGp4T8t0wVdi0y6g/1681107947/sites/default/files/inline-images/111_152.jpg)
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படம் 'வணங்கான்'. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மூன்றாவது முறையாக பாலா மற்றும் சூர்யா கூட்டணி உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்தது.
பின்பு திடீர் திருப்பமாக 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலக அவருக்குப் பதிலாக அருண் விஜய் நடிப்பதாகத் தகவல் வெளியானது. மேலும் க்ரீத்தி ஷெட்டியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலக ரோஷினி பிரகாஷ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வந்ததாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அருண் விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து இப்படத்தில் நடித்த துணை நடிகை லிண்டா என்ற பெண் சம்பளம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு அவரை ஜிதின் என்ற நபர் அடித்ததாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 17 ஆம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவை எழுதச் சொல்லியுள்ளார் பாலா. இதனை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், "பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு கதை சொன்னாய்; இதிலும் வெல்வாய். உடம்பில் தினவும் உள்ளத்தில் கனவும் உள்ளவனைக் கைவிடாது கலை. ஐந்து பாட்டிலும் ஐந்தமிழுக்கு வழிவைத்தாய். தீராத கங்குகளால் பழுத்துக் கிடக்கிறது என் பட்டறை. தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன் போய் வா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து, பரதேசி படம் மூலம் முதல் முறையாக பாலாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதினார். இவர் எழுதிய 'செங்காடே...', 'செந்நீர் தானா...' உள்ளிட்ட பாடல்களின் வரிகள் பலராலும் பாராட்டப்பட்டது. பின்பு துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' படத்தில் 'வானோடும் மண்ணோடும்...' பாடலை எழுதினார். அதனைத் தொடர்ந்து தற்போது வணங்கான் படத்தில் இணைந்துள்ளார்.