Skip to main content

"ஏங்குகிறேன், இரங்குகிறேன்..." -  நெல்லை கண்ணன் மறைவுக்கு வைரமுத்து வருத்தம் 

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

vairamuthu mourn nellai kannan

 

பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன்(77) 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக காமராஜர் குறித்து நெல்லை தமிழில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார். நெல்லை கண்ணன் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதைப் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் உடல்நலக்குறைவால் நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்தவகையில் நெல்லை கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 

 

"தமிழறிஞர்

நெல்லை கண்ணன் மறைவு
நெடுந்துயரம் தருகிறது

 

சங்க இலக்கியம் சாற்றியவர்
கம்பரைக் காட்டியவர்
பாரதியைப் போற்றியவர்
பாவேந்தரை ஏற்றியவர்
கண்ணதாசனை நாட்டியவர்
மறைந்துற்றார்

 

யார் அவர்போல்
பேசவல்லார்?

அவர்போன்ற
எள்ளல்மொழி வள்ளல்
இனி எவருளார்?

 

ஏங்குகிறேன்;
இரங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா?” - கேள்வியெழுப்பும் கவிஞர் வைரமுத்து

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Vairamuthu question Tweet 

வட இந்தியாக்களில் தமிழர்கள் பயணிக்கும் போது இந்தி மொழி தான் தேசிய மொழி என்ற திணிப்பினை இராணுவத்தினர், காவல் அதிகாரிகள் போன்றவர்கள் நமக்கு சொல்வார்கள். அது தமிழர்களிடையே மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தும். இது அடிக்கடி நிகழும் சம்பவமாகும். சமீபத்தில் கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தி மொழிதான் தேசிய மொழி என தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வாதிட்ட சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது “இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா? இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வடநாட்டுச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழ் தெரியுமா என்று தெள்ளு தமிழ் மக்கள் எள்ளியதுண்டா? சிறுநாடுகளும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சிமொழிகளால் இயங்கும்போது இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா? 22 பட்டியல் மொழிகளும் ஆட்சிமொழி ஆவதுதான் வினாத் தொடுத்த காவலர்க்கும் விடைசொன்ன தமிழச்சிக்குமான ஒரே தீர்வு” என்றிருக்கிறார்.

 


 

Next Story

நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கு... - ரஜினிகாந்த்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Rajinikanth's Birthday wishes from Vairamuthu

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் “தங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு மின்னூட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். அதை மிக்க விலைகொடுத்துத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது. எதையும் மறைத்ததில்லை என்னிடம், நீங்கள் பலம், பலவீனம், பணம், பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். உடல், மனம், வயது கருதி நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கையெல்லாம் வழிவகுக்கும். வாழ்த்துகிறேன் விரும்பும்வரை வாழ்க!” என்றிருக்கிறார்.