Skip to main content

“கலைஞர் கையைப் பிடித்துக் கொண்ட உணர்வு” - வைரமுத்து நெகிழ்ச்சி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
vairamuthu about kalaignar memorial

சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 

இந்த நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்து வைரமுத்து நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன் 

கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத் 
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

‘இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்’

கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்

நன்றி தளபதி” என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்