Skip to main content

'மாமன்னன்' படக் காட்சியைக் குறிப்பிட்டு உதயநிதிக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

udhayanidhi speech issue mari selvaraj congrats udhayanidhi

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்ச்சையாகி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

அரசியல் பிரபலங்கள் தாண்டி, திரைப் பிரபலங்களாகிய பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் உதயநிதிக்கு ஆதரவளித்திருந்தனர். இந்த சூழலில் உதயநிதியை வைத்து மாமன்னன் படம் எடுத்த மாரி செல்வராஜ், திடீரென்று உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" எனக் குறிப்பிட்டு மாமன்னன் பட இறுதிக் காட்சியைப் பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு தமிழ்நாட்டுடைய சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், சட்டமன்றத்தில் நுழைந்து, திருக்குறளை மேற்கோள்காட்டி விளக்கம் அளித்திருப்பார். அதைப் பகிர்ந்த மாரி செல்வராஜ், உதயநிதி நடித்த கதாபாத்திரமான அதிவீரன் என்ற பெயரைப் பதிவிட்டு உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சிவப்பு, நீலம், கருப்பு நிற இதய எமோஜியை இணைத்துள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்