Skip to main content

"சமூகத்தில் அது நிகழ வேண்டும்" - மாமன்னன் காட்சி குறித்து திருமாவளவன் எம்.பி

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

thirumavalavan about maamannan

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்தின் வெற்றியை ஏ.ஆர். ரஹ்மான், உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள்.

 

இந்நிலையில் திருமாவளவன் எம்.பி, மதுரையில் மாமன்னன் படத்தை பார்த்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மிகத் துணிச்சலாக இந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தை தயாரிப்பதற்கும் நடிப்பதற்கும் உடன்பட்டு முழுமையாக இதில் ஈடுபட்டு வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெஞ்சார்ந்து பாராட்டுகிறேன். சனாதனத்தின் அடிப்படையாக இருக்கிற பாகுபாட்டினை தனது கருப்பொருளாக எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு பக்கம் சாதி வெறியின் போக்கு இன்னொரு பக்கம் சமூக நீதி அரசியல். இரண்டுக்கும் நடக்கிற யுத்தத்தில் சாதிவெறி வீழ்த்தப்படும் சமூக நீதி வெற்றி பெறும் என்பதை இப்படத்தின் ஊடாக நிறுவியிருக்கிறார். என்றாலும் சமூக நீதி போராட்டம் கடினமானது. குருதி சிந்தும் போராட்டமாக இருப்பது என்பதை மிக தத்ரூபமாக எடுத்து விவரித்திருக்கிறார். 

 

‘உன் அப்பாவை நிற்க வைப்பது என் சமூகத்தின் அடையாளம். உன்னை உட்காரச் சொல்ல வைப்பது எங்களின் அரசியல்’ என்று வில்லனை வைத்து பேச வைத்திருக்கிறார். தனது தந்தையை பிறருக்கு சமமாக அமர வைக்க வேண்டும் என்ற போராட்டமாக மாரி இயக்கியிருக்கிறார். உதயநிதி சிறப்பாக நடித்திருக்கிறார். வடிவேலுவின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது. இப்படம் காலத்திற்கு பொருத்தமான ஒரு திரைப்படம். அம்பேத்கர், பெரியார், சே குவேரா போன்ற தலைவர்களை பின்னணியில் காட்டுவதும் நிறைவாக அம்பேத்கர் அரசியலை குரல் பதிவாக காட்டுவதும் போற்றுதலுக்குரியது. அரசியலில் எந்தளவிற்கு சாதீயம் தலைவிரித்து ஆடுகிறது, சமூகத்தில் நீண்ட நெடுங்காலமாக இறுகிக் கிடக்கிற இந்த போக்குகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக முக்கியமான காட்சியில் வைத்திருக்கிறார். 

 

சாதி இந்துக்கள் என்ற வளையத்திற்குள்ளே எல்லோரும் சிக்கிக்கொள்ளக் கூடாது. ஜனநாயக சக்திகளாகவும் எழுச்சி பெற வேண்டும் என்ற வகையில் சொந்த சாதி சமூக அடையாளங்களை உதறிவிட்டு மாமன்னனுக்கு வரவேற்பு கொடுக்கக் கூடிய வகையிலே சாதி இந்து சமூகத்தில் இருந்து வெளியே வருகிற காட்சி மிக முக்கியமான ஒரு புள்ளி. அது தான் சமூகத்தில் நிகழ வேண்டும். ஜனநாயக சக்திகள் சாதியாய் சுருங்கி முடங்கிப் போகாமல் அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்று ரத்னவேலுக்கு (ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம்) எதிராக அவர்கள் எழுச்சி பெறுகிறார்கள். அந்த காட்சியையும் முக்கியமான காட்சியாக பார்க்கிறேன். ஒட்டுமொத்தத்தில் இப்படம் சமூக நீதியே வெல்லும் என்று உணர்த்துகிறது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.