Skip to main content

வழக்கத்துக்கு மாறாக மேடையில் காமெடி செய்த விஜய்!

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

''உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்கை ஜம்முனு இருக்கும்" - இது நேற்று நடந்த சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய பன்ச். விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

 

thalapathy vijay



ஆரம்ப காலத்தில் 'அவர் ரிஸர்வ்ட் டைப், அதிகம் பேசமாட்டார்' என்பதே திரையுலகில் விஜய் குறித்த கருத்தாக இருந்தது. அப்போதெல்லாம் மேடையில் பேச மிகவும் தயங்குவார் விஜய். எப்போதாவது ஒரு முறை கலைநிகழ்ச்சி மேடையில் பாடுவார். தன் ரசிகர் மன்ற மேடைகளிலேயே கூட அதிகம் பேசாதவர்தான் விஜய். இப்படியிருந்த விஜயை பேசத் தூண்டியது 'தலைவா' அனுபவம் என்று சொல்லலாம். 'தலைவா' படம் சந்தித்த பிரச்சனைகளும் இவருக்குத் தந்த அனுபவங்களும் விஜயை மேடையில் நிறைய பேசவைத்தன.

'தலைவா' வெளியானதுக்குப் பின் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் முதன் முதலில் பக்குவமாக, தெளிவாக உள்ளர்த்தத்தோடு பேசினார் விஜய். "ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள்தான் தீர்மானிக்கவேண்டும், சூழ்நிலைகள் அல்ல" என்று பன்ச் வைத்தார். "அவ்வளவு ஈஸியா இந்த உலகத்துல நம்மள வாழ விட்றமாட்டாங்க" என்று மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அந்த விழா நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, ட்விட்டரில் விஜய் குறித்து விமர்சித்த ஒரு பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக விமர்சித்திருந்தனர் சில விஜய் ரசிகர்கள். அது அளவுக்கு மீறி சென்றதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுவெளியில் கோரிக்கை வைத்தார். அதை குறிப்பிட்டுதான் நடிகர் விஜய் இப்படி பேசினார் என்று விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு முன் 'வில்லு' படத்தின் தோல்விக்குப் பின் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அவரது பேச்சிற்கு இடையூறு விளைவித்த ரசிகர்களை 'ஏய்...பேசிக்கிட்டுருக்கேன்ல' என்று கடுமையாக கண்டித்தது, இணையம் பரவலாக இல்லாத காலத்திலும் வைரலானது.
 

villu vijay



இப்படி இதுவரை மேடைகளில் பெரும்பாலும் சீரியஸாகவே பேசி வந்துள்ள விஜய், நேற்று மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். "என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே" என்று ஆரம்பித்த அவர், "இதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு, சும்மா சொல்லணும்னு தோணுச்சு" என்றார் புன்னகையுடன். "மெர்சலுக்கும் சர்காருக்கும் என்ன வித்தியாசமென்றால், மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்காரில், அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கிறார் முருகதாஸ் சார்" என்று வார்த்தைகளில் விளையாடினார். கலாநிதி மாறன் பற்றி குறிப்பிடும் பொழுது, "கலையை வளர்க்க நிதியை அள்ளி அள்ளி தருவதால்தான் கலாநிதி மாறன் என்று இவர் பெயர் அமைந்ததோ" என்று கலகலப்பாகக் குறிப்பிட்டார்.

வரலக்ஷ்மி குறித்து பேசும்போது, "வர்ற லக்ஷ்மியை விட கூடாதுல?" என்று கமெண்ட் பண்ணினார். யோகி பாபு குறித்துப் பேசும்போது அவரது வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என்று கூறிவிட்டு, "உங்க ஹேர்ஸ்டைல சொல்லல யோகி, உங்க சினிமா கரியரை சொன்னேன்" என்றார். இப்படி இதுவரை காணாத உற்சாகத்தோடு நேற்றைய மேடையில் 'நண்பா, நண்பீ' என ஜாலி செய்தார் விஜய்.           


 

சார்ந்த செய்திகள்

Next Story

''யாரு முயல்? யாரு யானை?''- வழக்கம்போல் குட்டிக்கதை சொன்ன விஜய்

Published on 01/11/2023 | Edited on 02/11/2023

 

"Who is the rabbit? Who is the elephant?''-Vijay told a short story as usual

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் விஜய் வழக்கம் போல் ஒரு குட்டி கதை சொன்னார். அவர் பேசியதாவது ''இரண்டு பேர் ஈட்டியுடன் வேட்டைக்கு சென்றார்கள். ஒருத்தர் ஈட்டியில முயல அடிச்சு தூக்கிட்டாரு. இன்னொருத்தர் ஈட்டியை வைத்து யானையை எய்ம் பண்றாரு, எய்ம் பண்றாரு மிஸ் ஆயிட்டே போகுது. அப்ப ரெண்டு பேரும் மீண்டும் ஊருக்குள்ள வராங்க. ஒருத்தர் கையில முயலோட வரார். ஒருத்தர் வெறும் கையில் வேலோட வரார். இவங்க ரெண்டு பேத்துல யாரு ஜெயிச்சாங்க'னு நினைக்கிறீங்க. யார் கெத்து'னு நினைக்கிறீங்க.

 

அந்த யானையை எய்ம் பண்ணி தவற விட்டார் இல்ல அவர் தான். இதை நான் ஏன் சொல்றேன்னா நம்மால் எதை ஈசியா ஜெயிக்க முடியுமோ அதை ஜெயிப்பது வெற்றியில்ல நண்பா. நம்மால் எது ஜெயிக்கவே முடியாதோ அதை ஜெயிக்க முயற்சி பண்றோம் இல்ல, அதுதான். உன்னிப்பாக கவனிக்கணும், முயற்சி பண்றோம் இல்ல, அதுதான் உண்மையான வெற்றி. உங்களுடைய குறிக்கோள்; உங்களுடைய லட்சியம்; எல்லாம் பெருசா யோசிங்க, பெருசா கனவு காணுங்க, பெருசா திங்க் பண்ணுங்க, யாரும் அதெல்லாம் யாரும் தவறு'னு சொல்ல முடியாது.

 

பாரதியார் சொன்னது தான் 'பெரிதிலும் பெரிது கேள்' அப்படி இருக்க வேண்டும் உங்கள் கனவுகள்; அப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆசைகள்; அப்படி இருக்க வேண்டும், உங்கள் உழைப்பு. அப்படி நீங்கள் பயணித்தால் இலக்கை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடம் இருக்கு நண்பா. ஆசைகள் இருக்கும்; கனவுகள் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கிறது. வீட்ல ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பாவோட சட்டையை எடுத்து போட்டுக்குவான். அவரோட வாட்சை எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளனு இருக்கும். வாட்ச் கையிலே நிற்காது. அந்த சேர்ல உட்காரலாமா இல்லையா? அந்த தகுதி எல்லாம் தெரியவே தெரியாது.  அப்பா மாதிரி ஆக வேண்டும் என்று கனவு. இதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணு நண்பா.

 

தயவு செஞ்சு சொல்றேன் சினிமாவை சினிமாவா பாருங்க. உலகம் முழுவதும் பார்த்தால், சினிமா மக்கள் பார்க்கின்ற பொழுதுபோக்கு அம்சம். அதில் வருகின்ற டயலாக், சீன்ஸ் எல்லாமே முழுக்க முழுக்க ஒரு கற்பனை. முழுக்க முழுக்க ஒரு செயற்கை தனமானது என்பது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். அப்படி ஒரு சில படங்களில் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான். அதை வேறுபடுத்தி காட்டுவதற்கு நீங்கள் என்ன பண்ணுவீங்க. அதற்கு தகுந்த மாதிரி சில காட்சிகள், அதற்கு தகுந்த மாதிரி சில வசனங்களை வைப்பது ஸ்கிரீன் பிளேயில் ஒரு காமனான விஷயம். அப்படி ஒரு சில கேரக்டர்கள் மூலம் சொல்லப்படுகின்ற சில தவறான எண்ணங்கள், ஆக்சன்... நான் உங்களுக்கு சொல்லி புரிய வைத்து அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு டெஃபனட்டா தெரியும் நீங்கள் யாரும் அதை ஃபாலோ பண்ண மாட்டீங்க என்று. நீங்கள் எல்லாம் என்ன அவ்வளவு  அன்மெச்சூரா என்ன. நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக்கோங்க. மற்றதை விட்டுருங்க. திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்''  என்றார்.

 

 

 

Next Story

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கச்சேரி குளறுபடிகள்; காவல் துணை ஆணையர் மீது நடவடிக்கை

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

AR Rahman Music Concert Action against Deputy Commissioner of Police

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்பு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார்.

 

இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் (10.09.2023) 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூட கடும் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தனர். மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு எனக் குற்றம் சாட்டினர். இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், "கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், "அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட்  நகலை பகிரவும்" எனக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த மின்னஞ்சலில் ரசிகர்களின் குறைகளை குறிப்பிடுமாறும், அது குறித்து அவர்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

அதே சமயம் இந்த இசைக் கச்சேரி ஏகப்பட்ட குளறுபடிகளை ஏற்படுத்திய நிலையில், அந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் தாம்பரம் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தார்.  அதில் போக்குவரத்துக்கு நெரிசல், அதிக கூட்டத்துக்கான காரணம், வாகனம் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவை குறித்தும் எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தி இருந்தார்.

 

AR Rahman Music Concert Action against Deputy Commissioner of Police
தீபா சத்யன்

 

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரியான பள்ளிகரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது மட்டுமின்றி சென்னை பெருநகர கிழக்கு ஆணையர் திசா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திருநெல்வேலி நகர கிழக்கு காவல்துறை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.