supreme court orders about the kerala story issue

Advertisment

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர். இப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது தடை விதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம்.

இதனிடையே தமிழகத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்பு வந்ததால் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இப்படத்தை திரையிடத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 8 ஆம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாட்டில் படத்தை திரையிட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாட்டின் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டபோது மேற்கு வங்கம் வேறுபட்டதல்ல என்று கூறியது. மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்க தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் “தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளனர்.திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்துவிட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்” என்று விளக்கம் அளித்தனர்.

Advertisment

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மறைமுகமாகத்தடை செய்யக்கூடாது எனவும் படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளது. இப்படம் ஒரு கற்பனை கதை என்பதை திரைப்படத்தில் படத் தயாரிப்பு தரப்பும் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பொறுப்புதுறப்பு மே 20 அன்று மாலை 5 மணிக்குள் சேர்க்கப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.