வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.
பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு தொடங்கப்பட்டு சென்னை, புதுச்சேரி, பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது நிறைவுபெற்றுள்ளது. இதை படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியது படக்குழு. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் சிம்பு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார். நடிகர் சிம்புவின் இந்தச் செயலால் ‘மாநாடு’ படக்குழுவினர் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஈஸ்வரன்’ பட படப்பிடிப்பின் இறுதிநாளில் படக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் சிம்பு தங்க நாணயத்தைப் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.