ஆர்.கே.வி இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடைசி காதல் கதை'. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சீனு ராமசாமி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், "படத்தின் டீசரை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால், போஸ்டர் டிசைனை பார்த்தேன். அதை பார்க்கும்போதே மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. படத்தின் இயக்குநர் ஆர்.கே.வி எனக்கு 20 ஆண்டு கால நண்பர். அவர் ஒரு கதைப்புலி. எப்போதும் சினிமாவில் இயங்கிக்கொண்டிருப்பார். சினிமா மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைதான் புது முகங்களை வைத்து இப்படி ஒரு படத்தை அவரை எடுக்க வைத்துள்ளது. அந்த நம்பிக்கை வீண் போகாது. நிச்சயம் வெற்றிபெறும்.
சமீபத்தில் ஒரு ஓடிடி நிறுவனம் என்னை அழைத்துப் பேசியது. அப்போது பேசும்போது கதையம்சம் கொண்ட படங்களை இயக்கும் இயக்குநர்கள் இனி நம்பிக்கையாக இருக்கலாம் சார் என ஒருவர் கூறினார். புதிதாக ஏழு ஓடிடி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கேட்பதற்கே மிகவும் சந்தோசமாக இருந்தது. இது படைப்பாளிகளுக்கு நம்பிக்கையான காலமாக இருக்கிறது.
கே.எஸ்.ரவிக்குமார் மாதிரியான ஜாம்பவானை இந்த விழாவிற்கு அழைத்ததே ஆர்.கே.வியின் பெரிய வெற்றி. அவர் எடுத்த படங்களை இன்று பார்க்கும்போது எவ்வளவு மெனக்கெடலுடன் அவர் வேலை பார்த்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல கே.பாக்யராஜ் சாரும் வருகை தந்துள்ளார். தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை கதையின் நாயகனாக மாற்றியது அவர்தான். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" எனக் கூறினார்.