தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிலையில், அன்சார் கான் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘லக்ஷ்யம்’ படத்தின் கதைதான் ‘இடிமுழக்கம்’ என தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவந்தது. இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்துவந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்து இயக்குநர் சீனு ராமசாமி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில், "இடிமுழக்கம் ரீமேக் படமல்ல. நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரபரப்பான கதை. இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம். இடம் பொருள் ஏவல் படத்திற்கு எஸ். ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமியின் இந்த விளக்கம் மூலம் ‘இடிமுழக்கம்’ படத்தின் கதை தொடர்பாக நீடித்துவந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.