![rajini at kalaignar memorial opening ceremony](http://image.nakkheeran.in/cdn/farfuture/fkshfmQwFcJ3JALoXM2XNmBOne2Tw5Keo6iSJw1J7fs/1708954483/sites/default/files/inline-images/22_105.jpg)
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.
மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றிருக்கும் நிலையில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் கலைஞர் நினைவிடத் திறப்பு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். முதல்வருக்கு அருகில் அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். மேலும் வைரமுத்துவும் கலந்துகொண்டுள்ளார்.