Ponniyin Selvan; Police complaint against Mani Ratnam

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலில் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அண்ணாநகரை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் கொடுத்துள்ளார்.

Advertisment

அந்த புகாரில், "பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை திரித்து பொய்மைப்படுத்தி படமெடுத்துள்ளனர். குறிப்பாக வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போல பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோழ பேரரசில் முக்கிய அங்கம் வகித்த வந்தியத்தேவன் குறித்து தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளார். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் சோழப்பேரரசின் உண்மையான வரலாற்றை மறைத்து தவறிழைத்துள்ளனர். எனவே இத்திரைப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment