Skip to main content

ஓடிடியில் வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' ? விளக்கமளித்த படக்குழு

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

Ponniyin Selvan film to release theatres

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிவ ஆனந்த் பிரமாண்டமாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி முதலில் திரையரங்குகளில் வெளியாகும், அதன்பிறகு தான் ஒடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொன்னியின் செல்வன்; இயக்குநர் மணிரத்னத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Ponniyin Selvan Case against director Mani Ratnam has dismissed

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் மனு கொடுத்திருந்தார். அந்த புகார் மனுவில், "வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போல பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோழ பேரரசில் முக்கிய அங்கம் வகித்த வந்தியத்தேவன் குறித்து தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதி ராஜா மற்றும் பரதன் சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரரிடம், “பொன்னியின் செல்வன் நாவலைப் படித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர், “நாவலைப் படிக்கவில்லை” எனப் பதிலளித்துள்ளார். “நாவலைப் படிக்காத நிலையில் எப்படி வரலாற்றைத் திரித்துள்ளதாகக் கூறமுடியும்” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இப்படம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றைத் தழுவி எடுக்கப்படவில்லை” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

 

 

Next Story

கல்கியின் வாழ்க்கை வரலாறு - மணிரத்னம் நெகிழ்ச்சி

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

Biography of Kalki book released by Mani Ratnam

 

இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' பட வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் பணிகளில் பிசியாக உள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாறு ‘கல்கி: பொன்னியின் செல்வர்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இதனை பத்திரிகையாளர் எஸ்.சந்திரமவுலி எழுதியுள்ளார். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். முதல் பிரதிகளை கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக்கொண்டனர்.

 

இது குறித்து மணிரத்னம், "அமரர் கல்கியின் எழுத்துகள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது பொருத்தமானது” என்று நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.