Skip to main content

"தமிழை காப்பாற்ற இதைச் செய்யலாம்" - பட விழாவில் இயக்குநர் பேரரசு கூறிய அடடே யோசனை 

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

Perarasu

 

ஷிவானி செந்தில் இயக்கத்தில் சுபா செந்தில் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'டேக் டைவர்ஷன்’. இதில் கே.ஜி.எஃப். படப்புகழ் சிவக்குமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "இப்படத்தின் கதாநாயகன் சிவக்குமார், தமிழ் சினிமாவின் என்றும் மார்க்கண்டேயனான சிவகுமாரைப் போல் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். நாயகன் சிவக்குமார் பேசும்போது, 'என்னுடைய தாயார் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார்' எனக் குறிப்பிட்டார். இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத ஒரு ஜீவன் என்றால் அது தாய்தான். அவர்களின் எதிர்பார்ப்பு, 'தன் பிள்ளை நன்றாக பெயரெடுக்க வேண்டும். தன் பிள்ளை வெற்றி பெற வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும்' என்பதுதான். இப்படத்தின் நாயகன் சிவகுமார் மேடையில் பேசும்போது தன்னுடைய குருவிற்கு நன்றி தெரிவித்த பிறகுதான் தாய்க்கு நன்றி தெரிவித்தார். அப்போதே அவர் கலைஞராகிவிட்டார். ஒரு கலைஞனுக்கு முதலில் குருதான் அனைத்தும். அதன்பிறகுதான் மற்றவர்கள்.

 

அண்மைக்காலமாக தமிழைக் காப்பாற்ற வேண்டும், இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பு என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ் அழியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறேன். முன்பெல்லாம் விழாக்களில் கலந்து கொள்ளும் கதாநாயகிகள், ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைப் பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள். அண்மைக்காலமாக நான் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகிகள் தமிழில் பேசுகிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் பாடினி. அருமையான இலக்கியத் தமிழ் பெயர். அவர்கள் தமிழில் பேசுவதே அழகு. அழகான பெண் தமிழில் பேசினால் அதைவிட அழகு. அதனால் இனிமேல் அழகான பெண்கள் தமிழில் பேசி, தமிழைக் காப்பாற்ற வேண்டும்.

 

சென்னையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் டேக் டைவர்ஷன் தான். ஒரு கிலோ மீட்டருக்கு செல்லவேண்டிய தூரத்திற்கு, ஆறு கிலோமீட்டர் வரை டேக் டைவர்ஷன் எடுத்துச் செல்வோம். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால், 'டேக் டைவர்ஷன்' என்பது இயல்பான, பழகிப்போன, ஒரு பொருத்தமான தலைப்பு.

 

இன்றைய தேதியில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால், அதில் பெரிய ஹீரோ நடித்திருக்க வேண்டும் அல்லது கதை ஹீரோவாக இருக்க வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருகிறார்கள். அந்தவகையில் டேக் டைவர்ஷனில் கதை தான் ஹீரோ.

 

இயக்குநர் ஷிவானி செந்தில் ஏற்கெனவே 'கார்கில்' என்ற ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படத்தை இயக்கியவர். அந்தப் படத்திலும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டவர். தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படத்திற்கு ஆதரவு கிடைத்தது போல், அவரது 'இரவின் நிழல்' என்ற புதிய முயற்சிக்கும் ஆதரவு கிடைக்கும். அந்தப் படத்தை பார்த்துவிட்டேன். பார்த்திபனின் புதிய முயற்சிக்குப் பாராட்டுகள். அவர் ஒரு தமிழ் இயக்குநர் என்பதால் நானும் பெருமிதம் அடைகிறேன்.

 

டேக் டைவர்ஷன் பலருக்கு நல்ல வழியைக் காட்டிவிடும். இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிகராக வெற்றி பெறுவதற்காகத்தான் திரை உலகிற்கு வந்தார். ஆனால் அவர் டேக் டைவர்ஷன் எடுத்து இயக்குநராகி, பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஒரு கிராமவாசி திரை உலகில் நுழைந்து வெற்றிகரமான இயக்குநராக முடியும் என்பதை அவர் நிரூபித்தார். இதனால் நூற்றுக்கணக்கான கிராமத்துவாசிகள் இயக்குநர் கனவோடு தமிழ் திரையுலகில் படையெடுத்து வருகிறார்கள். அவர் வெற்றி அடைய வில்லை என்றால், இன்று பேரரசு உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் திரையுலகில் அறிமுகமாகி இருக்க மாட்டார்கள். அதனால் பல தருணங்களில் டேக் டைவர்ஷன் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஷிவானி செந்தில் இயக்கியிருக்கும் டேக் டைவர்ஷன் அவருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஏற்றத்தை அளிக்க வேண்டும்.

 

திரையுலகை பொறுத்தவரை புதிய முயற்சிகள்தான் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்று வரலாறாகும். என்னைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களை வைத்து வெற்றிப்படத்தை அளிக்கும் இயக்குநர்களை விட, புதுமுகங்களை வைத்து பெரிய வெற்றியை வழங்குபவர்கள் தான் சிறந்த இயக்குநர்கள். அதுபோன்றதொரு வெற்றியை இயக்குநர் ஷிவானி செந்தில் பெறுவார்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை” - பேரரசு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
perarasu about vijay in Ninaivellam Neeyada Audio Launch

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  ‘நினைவெல்லாம் நீயடா’. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். ‘அப்பா’  படம் மூலம் கவனம் ஈர்த்த யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பேரரசு பேசுகையில், “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. 

இளையராஜாவின் 1417வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம். ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்று கூறினார். 

Next Story

“ஆடியோ விழாவில் பங்கேற்ற பிறகுதான் முழு சம்பளம் கொடுக்கணும்” - பேரரசு யோசனை

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
perarasu latest speech

'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இப்படம் 2கே கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை எஸ்.எஸ்.பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேரரசு பேசுகையில், ''இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு, இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறேன்.

இப்படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநரை, இயக்குநர் சங்கத்திற்கு வரவழைத்து பேசினோம். அவர் சிக்லெட்ஸ் படத்தின் கதையை விவரித்தார். உடனே இதுபோன்ற படத்தின் விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்து இங்கு வருகை தந்திருக்கிறேன். இந்தப் படத்தில் பிள்ளைகளின் விசயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படத்தை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் தங்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டு, ஏமாளிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது.

இன்றைக்கு விவாகரத்து அதிகரித்துவிட்டது. அதற்காக பெற்றோர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. இன்று ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசாமல் பல ஆண்டுகளாக கணவன் - மனைவி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகத் தான் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்பா அம்மா என்பது ஒரு பிராப்பர்ட்டி ஆகிவிட்டது. இதுபோன்ற சூழலில் 'சிக்லெட்ஸ்' போன்ற படங்கள் வெளிவருவது அவசியம்'' என்றார்.