Skip to main content

“டாஸ்மாக்கில் ‘கள்’ விற்கலாம்; அது நல்லது” - இயக்குநர் பேரரசு

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

perarasu latest speech

 

நந்தா லட்சுமணன் இயக்கத்தில் வேல்முருகன் தயாரிப்பில் பிரதீப் செல்வராஜ், அபிநயா, ஏ.ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெடுமி'. பனைமரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.  

 

இயக்குநர் பேரரசு பேசும்போது, "நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன். தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பனைமரத்திற்கு பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனைமரத்திற்குண்டு. பனைமரத்தில்தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம்  நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால், நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனைமரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள். இப்படிப்பட்ட பனைமரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

 

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும், அவ்வளவுதான். உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால், இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். அதற்கு ஒரு விலையை வைத்துக் கொள்ளுங்கள். உடலைக் கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்" என்றார். 

 

படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது, "இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல், அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம். ஒருவரிடம் திறமை இருக்கலாம். அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது. அவன் தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக்கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்