ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை. இதையடுத்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நடக்கவிருந்த கார் ரேஸுடன் நிவேதா பெத்துராஜை தொடர்புபடுத்தி தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபகாலமாக எனக்கு பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிப் பேசுபவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனமில்லாமல் கெடுக்கும் முன், தாங்கள் சேகரிக்கும் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்கும் என்று நினைத்ததால், நான் அமைதியாக இருந்தேன்.
நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள். நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நான் 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கிறேன். எனது குடும்பம் இன்னும் துபாயில் வசிக்கிறது. நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் இருக்கிறோம். திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரையோ, ஹீரோவிடம் நடிக்கவோ, பட வாய்ப்புகளை தரும்படியோ கேட்டதில்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். நான் எப்போதும் வேலை அல்லது பணத்திற்காக பேராசை கொள்ளமாட்டேன்.
என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002 ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். மேலும், 2013 ஆம் ஆண்டு முதல் ரேசிங்கே எனது விருப்பமாக இருந்து வருகிறது. உண்மையில் சென்னையில் நடத்தப்படும் ரேசிங் பற்றி எனக்கு தெரியாது. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, நான் இறுதியாக மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். நான் தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே.
நான் இதை சட்டரீதியாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது. அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்யமாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து எங்கள் குடும்பத்தை இனி எந்தக் காயங்களுக்கும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.