ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'சுமோ' திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படம், கடந்த 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன்பிறகு, இப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், சுமோ திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.
டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 10 மொழிகளுக்கு மேலாக 3டி முறையில் சரித்திரப் படமாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து விளக்கமளித்த சூர்யா, உடல் நலம் தேறி வருவதாகவும், உங்கள் அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டிற்குத் தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்றார். சமீபத்தில் ஓய்வு முடிந்து இந்தியா திரும்பினார். பின்பு மீண்டும் கங்குவா பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இப்படத்தில் தனது போர்ஷன்களின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கங்குவா படத்தின் என்னுடைய கடைசி ஷாட் முடிந்துவிட்டது. மொத்த படப்பிடிப்பு தளமும் பாசிட்டிவிட்டியால் நிரம்பியுள்ளது. இப்படம் பெரியது மற்றும் ஸ்பெஷலானது. நீங்க அதை திரையில் பார்ப்பதை காண ஆர்வமாக இருக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குநர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.