Skip to main content

"இனி எந்த படம் எடுத்தாலும் அதில் சமூகநீதி இருக்கும்" - மாரி செல்வராஜ்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

mari selvaraj pressm meet in maamannan audio launch

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படத்தின் இசை வெளியீட்டிற்காக படக்குழுவினர் உட்பட பல திரைப்பிரபலங்கள் வருகை தந்த நிலையில், படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது மாரி செல்வராஜ் பேசியது, "எந்த ஜானரில் படம் எடுத்தாலும் அதில் சமூகநீதி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். அந்த வகையில் இந்த படமும் என்னுடைய வாழ்வியல் சம்பந்தமான சமூகநீதி பேசக்கூடிய படமாக நிச்சயம் இருக்கும். இந்த படம் மட்டுமல்ல இனிமேல் எந்த படம் எடுத்தாலும் எத்தனை படம் எடுத்தாலும் அதில் சமூகநீதிக்கான அரசியல் கண்டிப்பா இருக்கும். எல்லாரும் வடிவேலு சாரை வேறொரு கதாபாத்திரத்தில் பார்த்திடமாட்டோமா என ஏங்கி உள்ளார்கள். அவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக மாமன்னன் இருக்கும். மேலும் படம் வெளியான பிறகு நிறைய அதிர்வலைகளை உருவாக்கும்" என்றார்.  

 

பிறகு விழா மேடையில் பேசிய அவர், "மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரம் என்னுடைய அப்பா. என் கண்ணீரை, என்னுடைய வலியை அவர் மொழியில் காட்டி உள்ளார். என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் மாமன்னன். தேவர் மகன் பார்க்கும் போது எனக்கு வலி, வேதனைகள் ஏற்பட்டது. ஒரு சினிமா எப்படி புரட்டிப் போடுகிறது? எது சரி தவறு என தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த நாள். அதில் வரும் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன். இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.

Next Story

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வெளியிட்ட வெற்றிமாறன் வெளியிடும் பட அப்டேட்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

சின்னத்திரையில் அறிமுகமாகி, அதற்கு பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுவதாக கடந்த 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரக்னி, லால் உள்ளிட்டோர் அவரகளது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. மேலும் போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறையுடன் கையில் சாக்பீஸ் உடன் இடம் பெறுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.