Skip to main content

"தல ரசிகர்களுக்கு இதைக் கூறிக்கொள்கிறேன்..." - ஈரானைச் சேர்ந்த பைக் ரைடர் மேரல் யாசர்லூ பதிவு!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

ajith

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. அஜித்தின் 60ஆவது படமாக உருவாகிவரும் இப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகவுள்ளது. தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் முன் நீண்ட பைக் பயணத்திற்கு அஜித் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ரஷ்யாவின் முக்கிய பகுதிகளில் பைக் பயணம் செய்துவந்த அஜித், இந்த முறை பல நாடுகளை உள்ளடக்கிய மிக நீண்ட பயணத்திற்குத் திட்டமிட்டுள்ளார். அதற்காக, இது போன்ற பைக் பயணங்களைச் செய்துள்ள சில பைக் ரைடர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், ஈரானைச் சேர்ந்த பைக் மேரல் யாசர்லூ என்ற வீராங்கனையிடமிருந்தும் ஆலோசனை பெற்றுவருகிறார். இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள்கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

 

இந்த நிலையில், நடிகர் அஜித் குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை மேரல் யாசர்லூ பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "பி.எம்.டபிள்யூ மோட்டார்ஆட் தரப்பிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு சக ரைடர் அஜித்குமாரை நீங்கள் சந்திக்க வேண்டும் என்றும் அவரிடம் உங்கள் உலக பயணம் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். இருவருக்கும் பொருத்தமான நேரத்தில் சந்திக்க முடிவெடுத்தோம். அவர் இந்தியாவின் தென்பகுதியில் பிரபலமான நடிகர் என்பது எனக்கு தெரியவந்தது. நாங்கள் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகும்வரை அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியாது. ஒருவரது தொழில் அடிப்படையில் அவரைப் பற்றிய எந்த முடிவிற்கும் நான் வரமாட்டேன். நம் அனைவருக்கும் வேறுவேறு தொழில்கள் இருக்கின்றன என்பதை உறுதியாக நம்புகிறேன். ஒரு மனிதராக நாம் எப்படி இருக்கிறோம் என்பதே மற்றவர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும். அஜித்துடனான என்னுடைய அனுபவம் சிறப்பாக இருந்ததை தல ரசிகர்களுக்கு கூறிக்கொள்கிறேன். அவர் மிகப்பணிவானர் மற்றும் கனிவானவர். அவரை தெரிந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.