Skip to main content

இயக்குநர் லிங்குசாமி படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

tegegege

 

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சண்டக்கோழி 2'. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னும், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் பணிகளை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் லிங்குசாமி. 

 

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ளார். ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படத்தில் பங்குபெறும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 12ஆம் தேதி துவங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளன. ‘திரிஷ்யம்’, ‘லூசிஃபர்’ படங்களின் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘கே.ஜி.எஃப்’ படத்திற்கு ஆக்சன் காட்சிகளை வடிவமைத்த அன்பறிவு மாஸ்டர் இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கின்றனர். தெலுங்கு பதிப்பிற்கு சாய் மாதவ் புர்ரா மற்றும் தமிழ் பதிப்பிற்கு எழுத்தாளர் பிருந்தா சாரதி வசனம் எழுதுகின்றனர். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உத்தம வில்லன் நஷ்டம்...திருப்பதி பிரதர்ஸ் கண்டன அறிக்கை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Thirrupathi brothers about uttama villain issue

கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர், போஜ குமார், ஆன்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்  இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களைப் பரப்புவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான், கமலஹாசனை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான  உத்தம வில்லன், எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது கமலஹாசனுக்கும் நன்றாகவே தெரியும். 

உத்தம வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசனும் அவரது சகோதரர் அமரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான யூட்யூப் சேனல் ஒன்று உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Next Story

“அஞ்சான் ரீ எடிட்... பெரிய பட்ஜெட்டில் மகாபாரதம்” - லிங்குசாமியின் திட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
lingusamy paiyaa re release press meet he said anjaan also will re released

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இந்த நிலையில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்து ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை பேசினார் லிங்குசாமி. பையா 2 குறித்து பேசிய அவர், “ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது. அதற்கான நடிகர்கள் அமைந்தால் ஆரம்பித்துவிடலாம்” என்றார்.  மேலும், “ஆனந்தம், ரன், சண்டக்கோழி படங்களையும் ரீ ரிலீஸ் செய்தால் நல்லாயிருக்கும். இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களிடம் பேசவுள்ளேன்” என்றார். 

அஞ்சான் ரீ ரிலீஸ் குறித்து பேசிய அவர், “சோசியல் மீடியாவில் என்னை சோதித்த படம். எப்பவுமே ஒரு நல்ல படத்துக்கும், சுமாரான படத்துக்கும், இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருந்தால் நல்லா வந்திருக்கும் என்பது தான்  வித்தியாசமாக இருக்கும். எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருந்திருக்கும். அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்து ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது ஒரு ஆசை. நல்ல ஜாலியாக, ஈஸியாக, எளிமையாக இந்த படம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எடுத்தேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் எனக்கு சந்தோஷம். ஆனால் படத்தில் சில தவறுகள் இருக்கு. எடிட் பண்ண நேரமில்லை. ரிலீஸ் தேதி முடிவுபண்ணிவிட்டதால் அது பண்ண முடியாமல் போனது. அந்த நெருக்கடியால் சில தவறுகள் நடந்துவிட்டது” என்றார்.        
  
தொடர்ந்து பேசிய அவர், “படம் பண்ணாமல் இருப்பதால் சினிமாவை விட்டு விலகிவிட்டதாக பொருள் இல்லை. எதையோ தேடிக்கொண்டும், கற்றுக்கொண்டும் சினிமாவோடு பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கூட ஒரு மிகப்பெரிய படத்துக்கான வேலை தான் போய்ட்டு இருக்கு. மகாபாரதத்தை தழுவி, அபிமன்யுவும் அர்ஜுனனையும் முதன்மை கதாபாத்திரமாக வைத்து கதை எழுதி வருகிறோம். இந்தி தயாரிப்பாளர் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார் அதன் பணிகளிலும் இருக்கிறோம். அந்தப் படம் தான் அடுத்த படமாக இருக்குமா எனத் தெரியவில்லை. நடிகர்கள் அமைந்தால் ஆரம்பித்துவிடுவோம்” என்றார்.