இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து உருவாக்கியுள்ள ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று (15.10.2021) வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக ரௌடி பிக்சர்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படக்குழு அதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘ஊர் குருவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அருண் கே இயக்க, கவின் நாயகனாக நடிக்கிறார். கவின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், கவினின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
முன்னதாக, ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே கணிசமான வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.