Skip to main content

"என் படங்கள் இப்படி அமைவது திட்டமிட்டு நடப்பது அல்ல" - நடிகர் கார்த்தி விளக்கம்!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

bgdsfxbgszd

 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கி கார்த்தி நடித்திருக்கும் படம் 'சுல்தான்'. ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் தான் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் கார்த்தி பேசியபோது....

 

"பாக்யராஜ் சுல்தான் கதையைப் பற்றி ஒரு வரியில் கூறும்பொழுது, தந்தைக்காக இவன் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். ஆனால், இவனுக்கு வாழ்க்கையில் லட்சியமே வேறு. ஆனால் தந்தை கூறியதைச் செய்யலாமா வேண்டாமா என்று ஒரு குழப்பம். இருப்பினும் நம் வாழ்வில் வருத்தப்படக்கூடிய விஷயம் நாம் செய்யாமல் தவறவிட்ட செயல்கள்தான். ஆகையால் நான் இந்த முயற்சியில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை. அப்பா சொல்வதற்காகச் செய்கிறேன் என்று முடிவெடுக்கிறான் சுல்தான். அதன் பிறகுதான் அவனுக்குத் தெரிகிறது நூறுபேரை சமாளிக்க வேண்டும் என்று. அவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்களை எப்படிக் கட்டி மேய்க்கிறான் என்கிற சவால்தான் சுல்தான் திரைப்படம். 20 நிமிடங்கள் தான் பாக்யராஜ் கண்ணன் இக்கதையைக் கூறினார். கேட்ட உடனே ஒப்புக் கொண்டேன். பிறகு, எஸ்ஆர் பிரபுவிடம் இக்கதையை கேளுங்கள் என்று கூறினேன் அவரும் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றார். அதன் பின்பு, உணர்வுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூற, பாக்யராஜ் கண்ணன் அதை அமர்க்களமாக தயார் செய்தார். அதேபோல், நகைச்சுவை கதையில் தானாகவே வந்து அமர்ந்துவிட்டது. இப்படத்தில் என்னை சுல்தான் என்று லால் சார் செல்லமாக அழைப்பார்.

 

யோகிபாபுவுடன் முதன்முதலாக இணைந்து இப்படத்தில் நடிக்கிறேன். அவரைப் பற்றி கூறவே வேண்டாம். அதுவும், உணவகத்தில் அவர் செய்யும் நகைச்சுவையில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். நீங்கள் படம் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். ‘ஓட்ட லாரி’ என்று கதாபாத்திரத்தைக் கூறியதுமே யோகிபாபுதான் நினைவிற்கு வந்தார். யோகிபாபு இக்கதையில் முக்கியத் திருப்புமுனைக்கு காரணமாக இருப்பார். இக்கதையை நெப்போலியனிடம் கூறியதும் அவரும் சம்மதம் தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தாலே அவ்வளவு போராட்டம் வருகிறது. ஆனால், 100 பேர் இருந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே யோசனை செய்து கொள்ளுங்கள். அங்கு, நகைச்சுவை, சண்டை, கேலி.. கிண்டல், அவமானம் என்று அனைத்தையுமே கொண்டுவர முடியும். அதற்காக ஒன்றரை வருட காலம் நேரம் எடுத்துக் கதையை மெருகேற்றினார்.

 

இப்படத்தில், இன்னொரு சவாலான விஷயம் 100 பேரையும் காட்சிக்குள் கொண்டு வருவதுதான். அதேபோல், இப்படத்தில் எழுந்த இன்னொரு சிக்கல், எந்த லென்ஸ் போட்டு 100 பேரையும் ஒரே காட்சியில் அடைப்பது என்கிற குழப்பம் தீரவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. மேலும், தந்தை கூறியதற்காக 100 பேரை சமாளித்து விடலாம் என்று நினைக்கும்பொழுது, நிலைமை கைமீறிப் போகின்றது. அப்பொழுது தான் கதை தீவிரமாகப் போகின்றது. இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கான படமாக நிச்சயம் இருக்கும். 100 பேர் இருந்தாலும், இறுதிக் காட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்து அழகாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். ராஷ்மிகா இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் அப்பாவுடன் சிறுவயது முதலே தமிழ்ப் படங்களைப் பார்த்து வந்திருக்கிறார். நீண்ட நாட்களாக அவர் கிராமத்துப் பெண் பாத்திரத்திற்காக காத்திருந்திருக்கிறார். இப்பட வாய்ப்பு கிடைத்ததும் எனக்கும், அப்பாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார். அதேபோல் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை ரசித்துச் செய்தார். படப்பிடிப்பு தளத்திலும் இயல்பாக அனைவருடனும் பழகுவார். நாடு முழுவதும் அவர் பிரபலமடைந்த பிறகும் அவர் இயல்பாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.

 

dsdxbdx

 

இப்படத்தின் படிப்பிடிப்பு கடவூரில் நடத்தினோம். அந்த ஊர் மக்கள் மிகவும் பாசத்தோடு பழகினார்கள். தினமும் பலவித உணவுகளை ஆசையாகக் கொடுத்தார்கள். அங்குள்ள சிறுவர்கள் நடிகர் என்பதை மறந்து 'அண்ணா... வாங்க அண்ணா கிரிக்கெட் விளையாடலாம்' என்று அழைப்பார்கள். எனது ஒவ்வொரு படமும் இயக்குநர்களின் இரண்டாவது படமாக அமைவது திட்டமிட்டு நடப்பது அல்ல, தானாக நிகழ்வது. இப்படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறேன். முத்தையா இயக்கத்தில் ஒரு படமும், பி.எஸ்.மித்திரன் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறேன். பொன்னியன் செல்வன் படத்திற்காக நான் நிறைய புத்தகம் படிக்க வேண்டியிருந்தது. அப்போது 1,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் நிர்வாகம், நீர் மேலாண்மை போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

 

என் அண்ணன் சூர்யா, அவர் நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தை ஓடிடி-யில் வெளியிட்டு வெற்றிபெற்றார். நீண்ட நாட்கள் வெளியாகாமல் இருந்தால் அப்படத்திற்காக பணியாற்றியோர் பலரின் வாழ்க்கை அடுத்த நிலைக்குச் செல்லாது என்பதற்காக இம்முடிவை எடுத்தார். மேலும், அப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. கரோனா காலத்தில் அப்பாவிடம் கேட்டு சில புத்தகங்களைப் படித்தேன். இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதேபோல், சோழர்களின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் எனது நண்பர்களிடம் கேட்டு சில புத்தகங்கள் படித்தேன். மேலும், கரோனா காலத்தில் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து, அதில் விளைந்த புடலங்காய், கீரை போன்ற பல காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிட்டோம். 

 

என் அம்மா நமது மாடித் தோட்டத்தில் விளைந்தது என்று மகிழ்ச்சியாகக் கூறி பரிமாறுவார். எங்கள் வீட்டில் எப்போதும் சிறு தானிய உணவுகளைத் தான் உண்போம். இந்த வகையான உணவுகளை சாப்பிட பழகிவிட்டால் மற்ற உணவுகள் பிடிக்காது. சென்னையில் கிடைப்பதெல்லாம் பாலிஷ் செய்யப்பட்டது. ஆகையால், இயற்கையான உரம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை நேரடியாகச் சென்று வாங்கி வருவோம். உணவு விஷயத்தில் அப்பா மிகவும் கடுமையாகப் பின்பற்றுவார். மாலை 4 மணிக்கு மேல் எண்ணெய்யில் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள மாட்டார். என் மனைவி வந்தபிறகு வெள்ளை சர்க்கரையை முழுவதும் தவிர்த்துவிட்டோம். கேக் செய்வதற்குக் கூட நாட்டுச் சர்க்கரை தான் சேர்ப்போம்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் பயணத்திற்கு அழைத்துப் போகும் கார்த்தி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இப்படத்தின் வெற்றி கார்த்தி மற்றும் தமன்னாவின் சினிமா கரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேலும் இருவரின் காம்போ வெற்றி கூட்டணி என பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி கடந்த ஆண்டு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார். பின்பு பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஹீரோவாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.  

karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

இப்படி பையா 2 படம் பற்றி தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அண்மைக் காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு பையா பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், ஹிட்டடித்த நிறைய பழைய படங்கள் ரீ ரிலிஸாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது பையாவும் இணைந்துள்ளது.

இப்படம் வெளியான சமயத்தில் பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்தது ரசிக்கும்படியாக அமைந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பயணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

Next Story

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.