Skip to main content

"அமிதாப் பச்சன் படத்தால் தேவருக்கு ஏற்பட்ட நெருக்கடி" - தேவரின் மரணம் குறித்து பகிரும் கலைஞானம் 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

sando chinnappa devar

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சாண்டோ சின்னப்பத்தேவரின் மரணத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

அமிதாப் பச்சனுக்கு மிகப்பெரிய தொகையை ஒரே பேமெண்டில் கொடுத்து தேவர் புக் செய்தது குறித்தும் அமிதாப் பச்சன் சொன்னபடி கால்ஷீட் கொடுக்காதது குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அந்தப் பணத்தை வெளியே வட்டிக்கு வாங்கித்தான் தேவர் கொடுத்தார். அதனால் மீண்டும் வட்டிக்கு வாங்கி அமிதாப் பச்சன் படத்திற்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டிய நிலை தேவருக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அமிதாப் பச்சன் படம், ரஜினியை வைத்து ஒரு படம், தெலுங்கும் நடிகர் மோகன் பாபுவை வைத்து ஒரு படம் என மூன்று படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் தேவர். அமிதாப் பச்சன் படம் பாதி முடிந்திருந்த நிலையில், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என கிடைக்க கூடிய நாட்களில் எல்லாம் கால்ஷீட் வாங்கி அவர் படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். 

 

வட்டிச்சுமை அதிகமானதால் எப்போதுமே தேவர் டென்ஷனாகவே காணப்பட்டார். சுகர், பிரஷர் எல்லாம் அதிகரித்துவிட்டது. மூன்று படத்தின் படப்பிடிப்பும் ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் மூன்று நடிகர்களை வைத்து யாருமே அப்போது படம் எடுத்ததில்லை. படப்பிடிப்பிற்கு அனைத்தும் தயாரானவுடன் சென்னையில் இருந்து  ஊட்டிக்கு கிளம்பி வரச் சொல்லி  தேவருக்கு ப்ரொடக்ஷன் மேனேஜர் ஃபோன் செய்தார். ஊட்டி கிளம்புவற்காக தேவர் தயாராகிக்கொண்டு இருந்தார். அன்று, மோகன் பாபு நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு டயலாக்கை உதவி இயக்குநர் சேர்த்துவிட்டார். தேவர் கம்பெனி படத்தில் ஒரு சின்ன வசனத்தை சேர்த்தாலும்கூட அதை தேவருக்கு தெரிவிக்க வேண்டும். அவரின் ஒப்புதல் இல்லாமல் வசனத்தை மாற்றவோ சேர்க்கவோ கூடாது. ஆனால், உதவி இயக்குநர் அன்று ஒரு வசனத்தை சேர்த்துவிட்டார். 

 

கிளம்புவதற்கு முன்பு முதல்நாள் எடுக்கப்போகும் காட்சிகள் பற்றி தேவர் கேட்கவும், உதவி இயக்குநர் காட்சியை விளக்கி வசனத்தை வாசித்துக் காட்டுகிறார். அவரை இடைமறித்த தேவர், இது என்ன புது வசனம்... முன்னாடி இல்லையே என்கிறார். ஏற்கனவே இருந்த வசனம்தான், நீங்கதான் ஒப்புதல் கொடுத்தீங்க என்று உதவி இயக்குநர் சொல்ல தேவருக்கு கோபம் வந்துவிட்டது.  நான் எப்ப ஒப்புதல் கொடுத்தேன், பொய் சொல்றீயா என்று கடுப்பான தேவர், தோளில் போட்டிருந்த துண்டை தரையில் போட்டு தாண்டி இந்த வசனத்திற்கு நான் ஒப்புதல் கொடுக்கவே இல்லை என்கிறார். எந்த தயாரிப்பாளராவது உதவி இயக்குநருடன் சண்டை போட்டு துண்டை போட்டு தாண்டுவாரா? பணப்பிரச்சனையால் நிதானத்தையே இழந்துவிட்டார் தேவர். கடைசியில் அந்த வசனம் நீக்கப்பட்டது. இதுவெல்லாம் மாடியில் நடந்தது.

 

பின், படியிறங்கி கீழே வந்த தேவர், வீட்டில் இருந்த பூஜையறையில் முருகன் முன் நின்று என்ன இதுக்கு மேல சோதிக்காதடா முருகா... என்ன கொண்டுக்கிட்டு போய்டுடா என்று வேண்டினார். அப்போதுதான் அவரை கடைசியாக பார்த்தேன். தேவரின் நிலையை பார்த்து எனக்கு மனசு உடைந்துவிட்டது. பின், அவர் ஊட்டி கிளம்பிச் சென்றுவிட்டார். என்னுடைய அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பதற்காக நான் கிளம்பிவந்துவிட்டேன். மறுநாள் 12 மணிக்கு தேவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. அதைக் கேட்டு எனக்கும் உயிரே போனதுபோல ஆகிவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.