Skip to main content

5 வயதில் அனாதையாக விட்டுச் சென்ற அம்மாவை 100 பவுன் தங்கத்துடன் 14 வயதில் சந்தித்த கே.பி. சுந்தராம்பாள்!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், 5 வயதில் கோவிலில் விட்டுச்சென்ற தன் அம்மாவை 14 வயதில் கே.பி. சுந்தராம்பாள் சந்தித்தது எப்படி என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"கே.பி. சுந்தராம்பாள் நாடகக் கம்பெனியில் இருந்து தப்பி திருச்செந்தூருக்குச் சென்றது குறித்தும், அங்கு கோவில் குருக்கள் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியை இந்தப் பகுதியில் கூறுகிறேன். கே.பி. சுந்தராம்பாள் தப்பி ஓடிவந்துவிட்டதால் அங்கு நாடகம் நின்றுவிட்டது. மக்கள் அனைவரும் 5 வயது கே.பி. சுந்தராம்பாளின் குரலை அந்த அளவிற்கு ரசித்தார்கள். கே.பி. சுந்தராம்பாள் இல்லாமல் நாடகம் நின்றுவிட்டதால் கே.பி. சுந்தராம்பாள் எங்கு என்று நாடகக் குழுவினர் தேட ஆரம்பிக்கின்றனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்த கோவில் குருக்கள், கே.பி. சுந்தராம்பாள் திருச்செந்தூரில் இருக்கும் விஷயத்தை நாடகக் குழுவினரிடம் தெரிவிக்க ஒருவரை அனுப்பியிருந்தார். அவர், கே.பி. சுந்தராம்பாளை தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்த நாடகக் குழுவினரிடம் சென்று விஷயத்தைக் கூறுகிறார். அந்த நாடகக் கம்பெனியின் ஓனர் உடனே திருச்செந்தூருக்குக் கிளம்பி வருகிறார்.

 

அந்த ஓனரைப் பார்த்தது பயந்துபோன கே.பி. சுந்தராம்பாள், கதறி அழ ஆரம்பிக்கிறார். உடனே அந்த ஓனர், டான்ஸ் மாஸ்டரை திட்டிவிட்டுத்தான் தான் வந்ததாகவும், இனிமேல் விருப்பம்போல நீ நடிக்கலாம். உன்னை யாரும் ஏதும் சொல்லமாட்டர்கள் என்கிறார். திருச்செந்தூர் கோவில் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த அவர், மாதம் ஒரு பவுன் தங்கம் சம்பளமாகத் தருவதாக முருகன் மீது சத்தியம் செய்கிறார். ஆரம்பக்காலங்களில் எம்.ஜி.ஆரே ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் சம்பளத்திற்குத்தான் நடித்தார். ஆனால், 5 வயதில் கே.பி. சுந்தராம்பாளின் சம்பளம் ஒரு பவுன். அவரும் சரி எனச் சம்மதித்து நாடகக்குழு ஓனருடன் கிளம்பிச் செல்கிறார். கே.பி. சுந்தராம்பாள் திரும்பி வந்ததும் மீண்டும் நாடகம் தொடங்குகிறது. பேசியபடியே மாதம் ஒரு பவுன் சம்பளமாகக் கொடுக்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்தத் தங்கத்தையெல்லாம் யாரிடம் கொடுத்து வைப்பது என்று அவருக்கு குழப்பமாக இருந்தது. பின், நாடகக் கம்பெனி ஓனர் மனைவியிடம், 'இந்த நகையை நீங்க வச்சுருங்கம்மா... எங்க அம்மா திரும்பி வந்தா அவங்ககிட்ட நான் இதைக் கொடுக்கணும்' எனக் கூறி கொடுத்துவைக்கிறார். 

 

காலங்கள் ஓடுகின்றன. 14 வயது இருக்கும்போது கே.பி. சுந்தராம்பாள் வயதுக்கு வந்துவிடுகிறார். அவர் வயதுக்கு வந்தது நாடகக் கம்பெனியினருக்கு ஒருபுறம் மகிழ்ச்சியென்றாலும் இன்னொரு புறம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஏனென்றால் நாடகக் கம்பெனியில் பெரும்பாலும் ஆண்கள்தான் இருப்பார்கள். யாராவது ஒருவர் இருவர்தான் பெண்கள் இருப்பார்கள். இதனால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இந்த நேரத்தில், கே.பி. சுந்தராம்பாள் நாடகத்தைப் பார்த்த யாரோ ஒருவர் அவர் அம்மாவிடம் சென்று உன் மகளைத் திருநெல்வேலி ஜில்லாவில் நடந்த ஒரு நாடகத்தில் பார்த்தேன் என்று கூறியுள்ளார். தன் மகள் திருநெல்வேலியில் இருப்பது தெரியவந்ததும் அவர் அம்மா உடனே கிளம்பி திருநெல்வேலிக்கு வருகிறார். நாடகக் கம்பெனியில் கே.பி. சுந்தராம்பாளை பார்த்ததும் அவர் அம்மா ஓடிச் சென்று கட்டியணைத்து அழ ஆரம்பித்துவிடுகிறார். 5 வயதில் விட்டுச்சென்ற குழந்தையை 14 வயதில் ஒரு தாய் சந்தித்தால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். பின் நாடகக் கம்பெனி ஓனரின் மனைவி, கே.பி. சுந்தராம்பாள் வயதுக்கு வந்த விஷயத்தை அவரிடம் கூறுகிறார். கே.பி. சுந்தராம்பாள் அம்மாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக அவர் கூறியதற்கு நாடகக் கம்பெனி ஓனரும் சம்மதித்துவிடுகிறார். கே.பி. சுந்தராம்பாள் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த 100 பவுன் நகைகளையும் அவரது அம்மாவிடம் நாடகக் கம்பெனி ஓனரின் மனைவி கொடுக்கிறார். கே.பி. சுந்தராம்பாளின் அம்மா அதுவரை தங்கத்தைக் கண்ணில்கூட பார்த்திருக்கமாட்டார். மிகவும் வறுமையான நிலையில் அவர்களது வாழ்க்கை இருந்தது. மகளைக் கோவிலில் விட்டுச்சென்றதே வறுமை காரணமாகத்தானே. ஒரு பையில் எல்லா தங்கத்தையும் வாங்கிக்கொண்டு மகளுடன் சந்தோஷமாக நடக்க ஆரம்பிக்கிறார். பின், கொடுமுடியில் பழையபடி தங்களது வாழ்க்கையைத் தொடங்கினார்கள். கையில் இருந்த தங்கத்தை விற்றுவிற்று வாழ்க்கை நடத்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.