Skip to main content

ஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்! 

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

vanisri

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகை வாணி ஸ்ரீ திரைத்துறையில் அறிமுகமானது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

நடிகை வாணி ஸ்ரீ என்னுடைய கதையில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். துணை நடிகை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வந்த அவரை நான்தான் கதாநாயகி கதாபாத்திரத்திற்குப் பரிந்துரை செய்தேன். அவர் திரைத்துறைக்குள் அறிமுகமானதற்குப் பின்னால் ஒரு சுவாரசிய சம்பவம் உள்ளது. அதுபற்றி உங்களுக்குக் கூறுகிறேன். 

 

'காதல் படுத்தும் பாடு' கதைதான் என்னுடைய முதல் கதை. அதை 1965இல் முதல்முறையாக ஒரு தயாரிப்பாளரிடம் விற்றேன். அந்தக் கதையின் மூலம் வாணி ஸ்ரீ, சுருளி ராஜன், எடிட்டர் வெள்ளைச்சாமி எனப் பலர் அறிமுகமானார்கள். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடித்த ஜெயஸ்ரீயைத்தான் கதாநாயகியாக அந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஜெய்சங்கர் கதாநாயகன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்தப் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். தெலுங்கில் சவுகார் ஜானகியின் தங்கை கிருஷ்ணகுமாரியை ஒப்பந்தம் செய்தனர். அவருக்குத் தோழியாக துணை கதாபாத்திரத்தில் நடிக்க வாணி ஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டார். 'காதல் படுத்தும் பாடு' படம் தொடங்க இருந்த நேரத்தில், ஜெயஸ்ரீக்கு இந்தியில் ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தை முடித்துவிட்டு விரைவில் வந்துவிடுவேன் எனக் கூறிவிட்டு பாலிவுட்டிற்கு சென்றுவிடுகிறார் ஜெயஸ்ரீ. பின் சில நாட்கள் கழித்து தன்னால் உடனடியாக வரமுடியாத நிலை இருப்பதாகவும் வேறு யாரையாவது வைத்து படம் எடுத்துக்கொள்ளுங்கள் என ஜெயஸ்ரீ கூறிவிடுகிறார்.

 

வேறு வழியில்லாததால் முதலில் தெலுங்கில் எடுக்கலாம் என்று முடிவெடுத்து தெலுங்கு படப்பிடிப்பைத் தொடங்குகின்றனர். நான் அங்கு சேர் போட்டு அமர்ந்திருந்தேன். தெலுங்கு நாயகி கிருஷ்ணகுமாரியும் வாணி ஸ்ரீயும் மேக்கப் ரூமில் இருந்து வெளியே வந்தனர். கிருஷ்ணகுமாரியைவிட வாணி ஸ்ரீ அழகாக இருந்ததால் அவர் யாரென்று விசாரித்தேன். அவர் தோழியாக நடிக்க இருப்பதாக ஒருவர் கூறினார். அவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்தது போல இருந்ததால், அவரை அழைத்து யாரென்று விசாரித்தேன். கடைசியில் அவர் நான் வசிக்கும் தெருவிற்கு பக்கத்தில் தெருவில் வசிப்பதாகாக் கூறினார். 

 

வாணி ஸ்ரீக்கு மாமா ஒருவர் இருந்தார். ஐந்து மணிக்கு உளுந்த வடை போட்டு ஒரு டின்னில் எடுத்துக்கொண்டு வருவார். அந்தத் தெருவில் இருக்கிற குழந்தைகளுக்கு வடை கொடுத்துவிட்டு காசு வாங்காமல் செல்வார். அந்தத் தெருவில் 50 குழந்தைகளுக்கும்மேல் இருப்பார்கள். பின், கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் வருவார். அந்தக் குழந்தைகளின் தாய்மார்கள் வடைக்கான காசை அவரிடம் கொடுப்பார்கள். சில தாய்மார்கள் இன்று காசில்லை என்பார்கள். 'இருக்கட்டுமா... குழந்தைதான சாப்பிட்டுச்சு... இன்னைக்கு இல்லனா நாளைக்கு கொடுங்க' எனப் பெருந்தன்மையுடன் கூறுவார். அந்த வருமானத்தை நம்பித்தான் வாணி ஸ்ரீ மாமாவின் குடும்பம் இருந்தது. அவர்கள் வீட்டில்தான் வாணி ஸ்ரீ தங்கியிருந்து சினிமாவில் நடித்துவந்தார்.

 

அன்று ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்து என் மனைவியிடம் அந்தப் பெண் குறித்து கேட்டேன். ஏதோ நாடகத்தில் நடித்துவிட்டு வரும்போது அவரை பார்த்திருப்பதாக என் மனைவி கூறினார். அந்த தெலுங்கு ஷூட்டிங்கும் ஓரிரு நாளில் நின்றுவிட்டது. பின், தமிழில் எடுக்க முடிவெடுத்த இயக்குநர் ஜோசப் தளியத், ஏதாவது நடிகை இருந்தால் கூறுங்கள் என என்னிடம் கேட்டார். நான் உடனே, தெலுங்கில் துணை கதாபாத்திரத்தில் நடித்த வாணி ஸ்ரீயின் பெயரைக் கூறினேன். அவர் சிறிது யோசித்துவிட்டு, அவர் பொருத்தமாக இருப்பார்... அவரையே நடிக்க வைப்போம் என்றார். பின், வாணி ஸ்ரீயை அழைத்து ஜோசப் தளியத் பேசினார். “நீதான் நம்ம படத்துக்கு ஹீரோயின்... ரெடியா இரு... வண்டி வரும்” என்றார். மறுநாளே படப்பிடிப்பு தொடங்கியது. அந்தப் படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றிகிடைத்தது. அதற்குப் பிறகு ‘வசந்த மாளிகை’ மாதிரியான பல பெரிய படங்களில் நடித்து மிக உயர்ந்த இடத்திற்கு சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.