Skip to main content

'இந்தியன் 2'; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல்

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Kajal Aggarwal reveals Indian2 shoot resumed September 13th

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுப் போனது. இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.

 

ad

 


இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு இந்தியன் 2 படத்தின் பணியைத் தொடங்க உள்ளார். இதனிடையே நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக இந்தியன் 2 படத்திலிருந்து விலகியதாகவும், மேலும் அவருக்குப் பதில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் வதந்திகள் பரவின.

 

இந்நிலையில் இந்தியன் 2 குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிய காஜல், செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றியால் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உறையவைக்கும் காட்சிகள்” - பிரபலங்களின் பாராட்டில் ஆடுஜீவிதம் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
maniratnam kamal praised aadujeevitham movie

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார். 

Next Story

'கே.ஜி.எஃப் ஓனர்...’ - கேம் சேஞ்சரில் ராம் சரண் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
shankar ram charan game changer Jaragandi lyric video released

இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம், படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அது வைரலாகப் பரவ அதிர்ச்சியடைந்த படக்குழு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாடலை லீக் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இரண்டு நபர்களைக் கைது செய்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்பு வெளியாகவில்லை. 

இந்த நிலையில், 'ஜரகண்டி' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இன்று ராம் சரணின் பிரந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகப் படக்குழு இப்பாடலை வெளியிட்டுள்ளது. மேலும் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. இப்பாடல், ஷங்கர் படத்தில் வழக்கம் போல் இடம்பெறும் காதல் குத்து பாடலாக அமைந்துள்ளது. மேலும் பிரம்மாண்டமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் இடையில் காதலை விவரிக்கும் விதமாக அமைந்துள்ள இப்பாடலை தலேர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் ஆகியோர் பாடியுள்ளனர். முதலில் தெலுங்கு பதிப்பு வெளியானதை அடுத்து தற்போது தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது. அடுத்ததாக இந்தி பதிப்பும் வெளியாகவுள்ளது. 

தமிழ் பதிப்பிற்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். ஆங்கிலமும் தமிழும் கலந்து அதிக வரிகள் இடம் பெற்றுள்ளன. ‘வெள்ளை தங்கம் கே.ஜி.எஃப் ஓனர் நான்டி..., சிஸ்டம் சறுக்குனா மொறப்பான்டி, தண்டர் ஸ்டார்ம போல் டிண்டர் சீமையில் சொழண்டது வேற யாருடி...’ போன்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.